மாற்றுத்திறனாளிகள் கழிப்பறை லால்பாக் பூங்காவில் திறப்பு

பெங்களூரு : லால்பாக் பூங்காவில், சக்கர நாற்காலி பயன்படுத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறை நேற்று திறக்கப்பட்டது.

பெங்களூரில் உள்ள பிரபலமான பூங்காக்களில் ஒன்று, லால்பாக் உயிரியல் பூங்கா. இங்கு ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கில் சுற்றுலாப்பயணியர் வருகை தருகின்றனர்.

இருப்பினும், இங்கு நடக்க முடியாமல் சக்கர நாற்காலி பயன்படுத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறைகள் இல்லாமல் இருந்தன. இதனால், அவர்கள் சிரமப்பட்டனர்.

இதை கருத்தில் கொண்டு பெங்களூரை சேர்ந்த, 'ரேம்ப்சிட்டி' அரசு சாரா தொண்டு நிறுவனம், ஆஸ்திரேலிய துாதரகத்துடன் இணைந்து, நடக்க முடியாமல் சக்கர நாற்காலி பயன்படுத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறையை லால்பாக் உயிரியல் பூங்காவில் அமைத்து உள்ளது.

இந்த கழிப்பறையை பெங்களூரு தெற்கு பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யா, ரேம்ப்சிட்டியின் நிறுவனர் பிரதீக் கண்டேல்வால், இந்தியாவுக்கான ஆஸ்ரேலிய துாதர் பிலிப் கிரீன் திறந்து வைத்தனர்.

எம்.பி., தேஜஸ்வி சூர்யா கூறுகையில், ''இது துவக்கம் மட்டுமே. வரும் காலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்காக பல நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும். பெங்களூரில் பொது இடங்களில் சுகாதாரம் மேம்படுத்தப்படும்,'' என்றார்.

Advertisement