பாஜ முதுகின் பின்னால் பதுங்கி கொள்ளும் திமுக: நடிகர் விஜய் குற்றச்சாட்டு

9

சென்னை; பாஜ முதுகிற்கு பின்னால் திமுக பதுங்கி கொள்கிறது என்று தவெக தலைவர் விஜய் குற்றம்சாட்டி உள்ளார்.


@1brஇதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை;


75 ஆண்டுகளை கடந்த கட்சி என்றும் தமிழ், தமிழர் அடையாளம் என்றாலே அது தங்களுக்கு மட்டுமே உரியது என்பது போலவும் பொய்யாக மார் தட்டிக் கொள்ளும் தற்போதைய ஆளுங்கட்சியான திமுக, தமிழர் பெருமையான சோழ பேரரசர்களுக்கு உரிய மரியாதையை முன்பே முழுமையாக அளித்திருந்தால் இப்போது தமிழர்களுக்கு எதிராக இருக்கும் பாஜ அரசு இதை கையில் எடுத்திருக்காது. இதையெல்லாம் செய்யாமல், பிரதமர் வருகை தமிழகத்துக்கு பெருமை என்று வாஞ்சையாக சொல்லி சிலாகித்தது இந்த வெற்று விளம்பர மாடல் திமுக அரசு.


சோழ பேரரசின் பெருமையை கொண்டாட வேண்டியது தங்கள் கடமை என்பதை மறந்து பாஜ கையில் அடைக்கலம் புகுந்து தமிழகத்தை அடகு வைத்தது போலவே இப்போது தமிழர்களின் பெருமையையும் அடகு வைத்துள்ளது திமுக அரசு.


கீழடியில் கிடைத்த அசைக்க முடியாத ஆதாரங்களை மறைத்து, தமிழர் நாகரிகத்தையும் வரலாற்றையும் மூடி மறைக்க முயலும் பாஜ அரசு, இப்போது இங்கு வந்து சோழர்களின் பெருமை பற்றி பேசி உள்ளது. முழுக்க முழுக்க கபட நாடகமன்றி வேறென்ன? ஏற்கனவே, அரசியலில் கபட நாடகம் போடுவதையே இயல்பாக கொட் திமுக இப்போது பாஜ அரசின் கபட நாடகத்திற்கு தாள் பணிந்து வணங்கி, தங்கள் மறைமுக உறவினருக்கு விசுவாசத்தைக் காட்டி உள்ளது.


எதிர், எதிராக இருப்பது போல காட்டிக் கொண்டே உள்ளுக்குள் மறைமுகமாக இணைந்து ஓர் அரசியல் நாடகத்தை அரங்கேற்றும் திமுகவையும், பாஜவையும் ஓரணியில் கபடதாரிகள் என்றுதானே அழைக்க வேண்டும்?


நாம் இப்படிச் சொல்வது, மறைமுகமாக ஓரணியில் இணைந்து இருக்கும் இவ்விரு கபடதாரிகளுக்கும், மக்களுக்கு தவெக உண்மையை வெளிச்சம் போட்டு காட்டுகிறதே என்ற வகையில் எரிச்சல் ஏற்படலாம். அதற்கு என்ன செய்ய? உண்மை ஒருநாள் அம்பலமாகத்தானே செய்யும்.


அரசியலில் தன் இரண்டாம் ஆண்டில் பயணிக்கும் தவெக, தமிழக வரவாற்று பெருமைகளின் மீது பெரும் அக்கறை கொண்ட பேரியக்கம். சேர, சோழ, பாண்டியர்கள் ஆட்சியின் தொன்மப் பெருமைகளை பறைசாற்றும் பிரமாண்டமான அருங்காட்சியம் ஒன்று சென்னையில் அமைக்கப்பட வேண்டும் என்று சென்ற ஆண்டிலேயே தவெக தீர்மானம் இயற்றியது.


ஆனால் பவள விழாக் கண்ட இந்த திமுகவோ, பாஜ முதுகிற்கு பின்னால் பதுங்கிக் கொண்டு பம்முகிறது. கொள்கை, கோட்பாடுகளுடன் அண்ணா ஆரம்பித்த இயக்கம், இன்று அனைத்திலும் சமரசம் செய்து கொண்டு, தமிழுக்கும், தமிழர்களுக்கும் தமிழகத்திற்கும் எதிராக பாஜவிடம் சரணடைந்து கிடப்பதுதான் வேடிக்கை.இல்லை, இல்லை இதுதான் திமுக தலைமை குடும்பத்தின் வாடிக்கை.


மறைமுகமாக பாஜவும், திமுகவும் ஓரணியில் இருக்கும் கபடதாரிகளாக இணைந்து நடத்தும் அரசியல் ஆதாய நாடகத்தை இனியும் தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள். இவர்கள் இருவரின் மறைமுகமான கபட நாடக அரசியலுக்கான தக்க பதிலடியை 2026 தேர்தலில் தமிழக மக்கள் உறதியாக தருவார்கள்.


இவ்வாறு அந்த அறிக்கையில் நடிகர் விஜய் கூறி உள்ளார்.

Advertisement