குடிநீர் கிடைக்காமல் மாணவர்கள் அவதி

மொரப்பூர், தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் ஒன்றியம், நவலை பஞ்., அண்ணாமலைப்பட்டியிலுள்ள, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். இவர்களுக்கு, போதிய குடிநீர் வசதி இல்லாததால் அவதிப்பட்டு வருகின்றனர்.

இது குறித்து, மாணவர்களின் பெற்றோர் கூறியதாவது:

பள்ளியில் கடந்த, 2 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, குடிநீர் பிரச்னை உள்ளது. கடந்தாண்டு, 4.35 லட்சம் ரூபாய் மதிப்பில், வகுப்பறை கட்டட சீரமைப்பு பணி நடந்தது.
அப்போது, குடிநீர் வசதிக்கு, ஏற்கனவே இருந்த சின்டெக்ஸ் தொட்டியை வைத்து அதற்கு, குழாய் இணைப்பு கொடுக்காததால் தண்ணீர் வரவில்லை. மேலும், கழிப்பறையும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதற்காக மாணவர்கள் பள்ளி வளாகத்தை விட்டு வெளியே செல்ல வேண்டிய நிலை உள்ளது.
குறிப்பாக, பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட பின், தட்டு மற்றும் கைகளை கழுவக்கூட நீரின்றி மாணவர்கள் தவிக்கின்றனர். அதேபோல், பள்ளி சீரமைப்பு பணியின்போது, முறையாக ஜன்னல்கள் மற்றும் கதவுகள் பொருத்தவில்லை. எனவே, தண்ணீர் பிரச்னையை சரிசெய்து, மாணவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
இது குறித்து, மொரப்பூர் பி.டி.ஓ., சத்தியா கூறுகையில், ''அண்ணாமலைப்பட்டி பள்ளியை பார்த்து வந்தேன். அது குறித்து விசாரிக்க கூறியுள்ளேன்,'' என்றார்.

Advertisement