மயில் வடிவில் ஜெயின் கோவில்

கர்நாடகாவின் கடலோர மாவட்டமான தட்சிண கன்னடாவின் விட்டலாவில் பகவான் 1008 ஸ்ரீ சந்திரநாத் சுவாமி பாசதி உள்ளது. ஜெயின் சமூகத்தினர் வழிபடும் இந்த கோவிலின் கட்டமைப்பு, மயில் வடிவில் இருப்பதால், மயில் பாசதி என்றும் அழைக்கப்படுகிறது.

மயில் வடிவில் கட்டமைக்கப்பட்டிருக்கும் ஜெயின் மத கோவில் இது மட்டும்தான். இதனால் இந்த கோவில் தனித்துவமாகவும், பக்தர்களை ஈர்க்கும் வகையிலும் உள்ளது. இந்த பாசதி 800 ஆண்டுகள் பழமையானது.

துாரத்தில் இருந்து பாசதியை பார்க்கும்போது, தனது தோகையை விரித்து மயில் துாங்குவது போன்று காட்சி தரும். கோவிலின் கூரையில் உள்ள மயிலின் முகம் 150 கிலோ தாமிரத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

மழை, வெயில் நேரத்தில் மயிலின் உருவத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்கும் வகையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த வண்ண பூச்சுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பாசதியின் கூடுதல் சிறப்பு என்னவென்றால் இங்குள்ள ஒரு துாண் தங்கள் கையால் பக்தர்கள் சுழற்றும் வகையில் உள்ளது.

நமது நாட்டின் தேசிய பறவையான மயிலுக்கு கவுரவம் செலுத்தும் வகையில் இந்த கோவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கன்னடத்தில் மயிலுக்கு, நவிலு என பெயர். இதனால், பக்தர்கள் நவிலு பாசதி என்றும் அழைக்கின்றனர்.

தினமும் காலை 7:00 மணி முதல் மதியம் 1:30 மணி வரையும்; மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரையும் கோவில் நடை திறந்திருக்கும். பெங்களூரில் இருந்து விட்டலா 317 கி.மீ., துாரத்தில் அமைந்துள்ளது.


மெஜஸ்டிக் பஸ் நிலையத்திலிருந்து விட்டலாவுக்கு கே.எஸ். ஆர்.டி.சி., பஸ்கள் இயக்கப்படுகின்றன. ரயிலில் செல்பவர்கள் பன்ட்வால் ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து கோவிலுக்கு செல்லலாம்

- நமது நிருபர் - .

Advertisement