போயிங் விமானத்தின் இன்ஜின் பழுது; 'MAY DAY' அறிவித்து அவசரமாக தரையிறக்கம்

வாஷிங்டன்: வாஷிங்டனில் போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானத்தின் இடது இன்ஜின் புறப்பட்ட சில நிமிடத்தில் பழுதானது. இதனால் 'MAY DAY' அறிவித்து விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
வாஷிங்டனில் இருந்து ஜெர்மனிக்கு போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் புறப்பட்டு சென்றது. விமானம் 5,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது இடதுபக்க இன்ஜின் பழுதானது. இதனை கண்டறிந்த விமானிகள், வாஷிங்டன் விமான நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
பின்னர், விமானிகள் 'MAY DAY' அறிவித்து அவசரமாக மீண்டும் வாஷிங்டன் விமான நிலையத்திலேயே விமானத்தை பத்திரமாக தரையிறக்கினர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தற்போது விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த ஜூன் 12ம் தேதி குஜராத்தின் ஆமதாபாத்தில் இருந்து பிரிட்டனின் லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் 787 - 8 ட்ரீம் லைனர் இரட்டை இன்ஜின் விமானம் விபத்தில் சிக்கியது. இதைத்தொடர்ந்து போயிங் விமானம் அடிக்கடி விபத்தில் சிக்கி வருவது பயணியர் மத்தியில் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.



