முன்னாள் ஊராட்சி தலைவர் மீது கலெக்டரிடம் ஊழல் புகார்

திருப்பூர்: ஊழல் புகார் கூறப்பட்ட பழைய கோட்டை முன்னாள் ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கலெக்டர் அலுவலக குறைகேட்பு கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், காங்கயம் தாலுகா, பழைய கோட்டை முன்னாள் ஊராட்சி தலைவர் சண்முகசேகரன். கடந்த 2014 முதல் 2019 வரை ஊராட்சி தலைவராக இருந்தபோது, ஊராட்சிக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தியதாகவும், கோர்ட் உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்க கோரியும், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற குறைகேட்பு கூட்டத்தில், கலெக்டரிடம் கண்ணுசாமி என்பவர், பொதுமக்களுடன் வந்து மனு அளித்தார்.

இது குறித்த, கண்ணுசாமி கூறியதாவது:

சண்முகசேகரன், ஊராட்சி தலைவராக இருந்தபோது, ஊராட்சிக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. அரசின் தணிக்கை துறையினராலும், ஊழல் கண்டறியப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கில், சண்முகசேகரன் 99 லட்சத்து 10 ஆயிரத்து 553 ரூபாயை திரும்பச்செலுத்த வேண்டும் எனவும், அவர்மீது கலெக்டர் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், சென்னை ஐகோர்ட், 2023, ஜன., 23ல் உத்தரவிட்டுள்ளது.

ஆனால், இரண்டு ஆண்டுகளாகியும், முன்னாள் ஊராட்சி தலைவர் மீது மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை; இழப்பீடு தொகையும் வசூலிக்கப்படவில்லை. அவர் மீது சட்ட நடவடிக்கை எடுத்து, இழப்பீடு தொகையை வசூலித்து, எங்கள் ஊராட்சி நிதிக்கு வழங்கவேண்டும்.

இவ்வாறு, கண்ணுசாமி கூறினார்.

பொய்ப்புகார் பொதுமக்களால், ஊழல் குற்றம் சாட்டப்பட்ட, முன்னாள் ஊராட்சி தலைவர் சண்முகசேகரன், கலெக்டரிடம் மனு அளித்த பின், கூறியதாவது:

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன், சென்னை ஐகோர்ட் உத்தரவுப்படி, என்மீது, 99 லட்சத்து 10 ஆயிரத்து 553 ரூபாய் தணிக்கை விசாரணை போடப்பட்டது.

கோர்ட் விசாரணை நடத்தத்தான் உத்தரவிட்டதே தவிர, பணம் செலுத்த வேண்டுமென உத்தரவிடவில்லை. இதுதொடர்பாக தணிக்கை செய்த மாவட்ட ஊராட்சி உதவி இயக்குனர் (தணிக்கை), புகார்கள் அனைத்தும் பொய் என உறுதி செய்யப்பட்டு, தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. 4.38 லட்சம் ரூபாய் மட்டும் செலுத்த வேண்டும் என தணிக்கை அதிகாரிகள் அறிக்கை அளித்துள்ளனர். அதுவும் தவறு என்று, கலெக்டரிடம் தற்போது மனு அளித்துள்ளேன்.விதிமுறைகளை மீறி இயங்கிய ஒரு கல்குவாரிக்கு எதிராக தொடர்ந்து போராடி வந்தேன். அந்த குவாரிக்கு, 3 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது; தற்போது அந்த குவாரியின் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. பழிவாங்கும் நடவடிக்கையாக, குவாரி நிர்வாகத்தினர், எனக்கு எதிராக சிலரை துாண்டிவிட்டுள்ளனர்.

இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement