வரி பெயர் மாற்றத்திற்கு லஞ்சம்; நகராட்சி பெண் ஊழியர் கைது -

தூத்துக்குடி; துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சியில் வீட்டு வரி பெயர் மாற்றத்திற்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் உதவியாளர் நவீனா போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

கோவில்பட்டியைச் சேர்ந்த செல்வகுமார் மனைவி காளீஸ்வரி. காளீஸ்வரியின் தந்தை துரைகண்ணன் அவரது(காளீஸ்வரி) பெயருக்கு சில ஆண்டுகளுக்கு முன் சொத்துக்களை எழுதி கொடுத்தார். காளீஸ்வரி பெயருக்கு வீட்டு வரியை மாற்றம் செய்வதற்கு செல்வகுமார் நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.

நகராட்சி வருவாய் உதவியாளர் நவீனா பெயர் மாற்றம் செய்ய ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டார். முதற்கட்டமாக ரூ. 10 ஆயிரம் தரும்படியும் அவர் கேட்டார். செல்வகுமார் லஞ்ச ஒழிப்பு போலீசிடம் புகார் அளித்தார்.

டி.எஸ்.பி.,பீட்டர் பால் துரை, இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி, எஸ்.ஐ., தளவாய் மற்றும் போலீசார் கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்திற்கு வெளியே இருந்தபடி ரசாயன பவுடர் தடவிய 500 ரூபாய் நோட்டுகளை செல்வகுமாரிடம் கொடுத்து அனுப்பினர். அதை வருவாய் உதவியாளர் நவீனா நகராட்சி அலுவலக வருவாய் பிரிவு அறையில் வைத்து செல்வகுமாரிடமிருந்து பெற்ற போது போலீசார் கைது செய்தனர். பின் நவீனா சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertisement