விவசாயிகளுக்கு ரூ.20,500 கோடி பிஎம் கிசான் நிதி: ஆகஸ்ட் 2ல் வழங்குகிறார் மோடி

11

புதுடில்லி: வரும் ஆக., 2ம் தேதி 9.7 கோடி விவசாயிகளுக்கு ரூ.20,500 கோடி பிரதமர் கிசான் நிதியை பிரதமர் மோடி விடுவிக்கிறார்.


பிஎம்-கிசான் திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகள், ஆண்டுதோறும் 6,000 ரூபாயை 3 தவணைகளில் பெறுகிறார்கள். இது நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்படுகிறது.


சாகுபடி நிலங்களை வைத்திருக்கும் சிறு மற்றும் குறு விவசாய குடும்பங்களுக்கு வருமான ஆதரவை வழங்குவதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாகும். அடுத்த கட்ட தவணை ஆகஸ்ட் இரண்டாம் தேதி விடுவிக்கப்பட உள்ளது.


இது குறித்து வேளாண் அமைச்சகம் அறிக்கை: நாடு முழுவதும் 9.7 கோடி விவசாயிகள் பயனடையும் வகையில், ஆகஸ்ட் 2ம் தேதி உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் இருந்து ரூ.20,500 கோடி மதிப்புள்ள பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் 20வது தவணையை பிரதமர் நரேந்திர மோடி விடுவிக்கிறார்.


மத்திய அரசின் முதன்மை நேரடி பலன் பரிமாற்றத் திட்டம் 2019ல் தொடங்கப்பட்டு 5 ஆண்டு நிறைவடைந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

.
இதுவரை, திட்டத்தின் கீழ் 19 தவணைகளாக ரூ.3.69 லட்சம் கோடி நேரடியாக விவசாயிகளின் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.


பிரதமர் தனது தொகுதியான வாரணாசியில் ஏற்பாடு செய்யப்படும் சிறப்பு நிகழ்ச்சியின் போது இந்தத் தவணை விநியோகத்தை தொடங்குவார். இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகளை மறுஆய்வு செய்வதற்காக வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் புதுடில்லியில் உள்ள கிருஷி பவனில் ஒரு ஆயத்தக் கூட்டத்தை நடத்தினார். இவ்வாறு வேளாண் அமைச்சக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement