மோகனுாரில் காதை பிளந்த சத்தம்; சூப்பர் சோனிக் விமானம் காரணமா?

மோகனுார் ; மோகனுாரில் தொடர்ந்து ஏற்படும் பயங்கர சத்தத்தால், நிலம், கதவு, ஜன்னல் அதிர்வதுடன், மயில்களும் அலறி பறந்தன.

நாமக்கல் மாவட்டம், மோகனுார், பேட்டப்பாளையம், மணப்பள்ளி, எஸ்.வாழவந்தி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று காலை, 11:50 மணியளவில், பலத்த சத்தம் ஏற்பட்டது. அப்போது, லேசான நில அதிர்வும் காணப்பட்டது.

வீடுகளில் இருந்தும், வணிக நிறுவனங்களில் இருந்தும் பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். ஒரு சில பகுதிகளில், ஜன்னல் கதவுகள் அதிர்ந்தன. திடீரென ஏற்பட்ட பயங்கர சத்தத்தால், மக்கள் பீதியடைந்தனர்.

பேட்டப்பாளையம் காவிரி கரையோர பகுதிகளில், அதிகளவில் மயில்கள் உள்ளன. சத்தம் கேட்டதும், மயில்கள் அலறி, அங்கும் இங்கும் பறந்தன. சத்தம் புரியாத புதிராக இருப்பதால், மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.

மோகனுார் தாசில்தார் மதியழகன் கூறுகையில், ''சூப்பர் சோனிக் விமானம் சென்றால் இதுபோன்ற சத்தம் கேட்கும். அதிவிரைவு விமானம், ஒலியின் வேகத்துக்கு மேல் செல்வதால், அந்த சத்தம் கேட்கிறது என்ற தகவல் உள்ளது. அவற்றை உறுதிப்படுத்த வேண்டும். ஒலியின் வேகத்தை தாண்டும் போது, அந்த சத்தம் வருவதாகவும் கூறப்படுகிறது. ஒலியின் வேகத்தை விட, அதிகமாக செல்லக்கூடிய அதிவிரைவு விமானம் தான் இதற்கு காரணம் என கூறப்படுகிறது,'' என்றார்.

கடந்த, 2023 ஜூலை, 7ல் தஞ்சாவூர் விமான படை தளத்திலிருந்து, கோவை, சூலுார் விமான படை தளத்துக்கு, சூப்பர் சோனிக் விமானம் சென்றுள்ளது. அப்போது, மோகனுார் பகுதியில் இதேபோன்று வெடிசத்தம் கேட்டது. 2024 ஜன., 16ம் தேதியும் இதேபோன்று சத்தம் கேட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement