இந்தியாவில் 3 ஆண்டுகள் முன்பே பதுங்கிய பஹல்காம் பயங்கரவாதிகள்: வெளியான புதிய தகவல்

25

புதுடில்லி; பஹல்காம் தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள் 3 ஆண்டுகளுக்கு முன்பே பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் நுழைந்து உள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.



பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் நடத்திய பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பதிலடி தந்தது. இந்த தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளை நேற்று முன்தினம் காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள டாச்சிகாமில் ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர்.


பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் விவகாரங்களில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்விகள் எழுப்பி வரும் நிலையில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் 3 ஆண்டுகள் முன்பு பாக்.கில் இருந்து இந்தியாவுக்குள் நுழைந்துள்ளனர் என்ற புதிய தகவலை ராணுவ அதிகாரிகள் வெளியிட்டு உள்ளனர்.


இது குறித்து அவர்கள் மேலும் கூறி உள்ளதாவது: சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் சுலேமான், ஹம்சா ஆப்கனி மற்றும் ஜிப்ரான் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர்கள் 3 பேரும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் ஆவர்.



3 ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் நுழைந்தனர். கடந்தாண்டில் அவர்கள் இரு குழுக்களாக பிரிந்து சுலேமான் தலைமையிலும், மூசா என்ற மற்றொரு பயங்கரவாதி தலைமையிலும் இயங்கி உள்ளனர்.


அதற்கு பின்னர், புதியதாக ஊடுருவிய மற்ற லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் காஷ்மீர் பள்ளத்தாக்கில் சுலேமானுடன் இணைந்து செயல்பட்டு வந்துள்ளனர். பின்னர் ஸ்ரீநகரில் இருந்து 20 கிமீ தொலைவில் டாச்சிகாம் பகுதியில் தலைமறைவாக இருந்திருக்கின்றனர்.


பஹல்காம் தாக்குதல் அரங்கேறும் வரை அவர்கள் அங்கேயே பதுங்கி உள்ளனர். அனைவரும் அதி நவீன உயர் அலைவரிசை கொண்ட வயர்லெஸ் கருவிகளை தகவல் பரிமாற்றத்துக்கு பயன்படுத்தி இருக்கின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement