புதுச்சேரி தலைமை செயலகத்தை ஜப்தி செய்ய வந்ததால் பரபரப்பு

புதுச்சேரி: புதுச்சேரி தலைமை செயலகத்தை ஜப்தி செய்ய வந்த கோர்ட் ஊழியர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி, கூனிச்சம்பட்டை சேர்ந்தவர் சுமதி. இவரது மகன் மணிகண்டன், கடந்த 2010ம் ஆண்டு, 5ம் வகுப்பு படித்தபோது, வீட்டின் அருகே முறைகேடாக பயன்படுத்தப்பட்ட மின்கம்பியை மிதித்ததால், மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
உயிரிழப்புக்கு மின்துறையின் அலட்சியமே காரணம் என கூறி, இழப்பீடு கேட்டு, சிறுவனின் பெற்றோர் புதுச்சேரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதில், பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோருக்கு, ரூ.9 லட்சத்து 70 ஆயிரம் இழப்பீடு வழங்க மின்துறைக்கு கோர்ட் உத்தரவிட்டது. அதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மின்துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அதில், சென்னை ஐகோர்ட் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கி, உடனடியாக இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால், இதுவரையில் இழப்பீடு வழங்கவில்லை. இதற்கிடையே, சிறுவனின் பெற்றோர் மீண்டும் புதுச்சேரி கோர்ட்டில் நிறைவேற்று மனு தாக்கல் செய்தனர்.
அதனை விசாரித்த 2வது கூடுதல் மாவட்ட நீதிபதி ஜெயந்தி, இழப்பீடு வழங்காததால் தலைமை செயலகத்தை ஜப்தி செய்து இழப்பீடு பெற நேற்று உத்தரவிட்டார். இதையடுத்து, வட்டியுடன் ரூ. 20 லட்சம் இழப்பீடு பெற கோர்ட் ஊழியர்களான அமீனா அம்பி, செல்வராஜ் ஆகியோர் நேற்று தலைமை செயலகம் வந்து ஜப்தி செய்ய முன்றனர்.
அவர்களிடம், சட்டத்துறை செயலர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்த கடிதம் தங்களுக்கு வரவில்லை எனவும், வரும் 5ம் தேதிக்குள் இழப்பீடு தொகை வழங்கப்படும் என உறுதியளித்தார். இதையேற்று, அமீனா மற்றும் பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோர் கலைந்து சென்றனர்.
தலைமை செயலகத்தை ஜப்தி செய்ய முயன்ற சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.