'அமைதிக்கான தலைவன் நான்' : அதிபர் டிரம்ப் தம்பட்டம்

2

வாஷிங்டன்: தாய்லாந்து - கம்போடியா நாடுகள் சண்டையை நிறுத்த ஒப்புக்கொண்ட பின், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில், 'என் தலையீட்டால் இரு நாடுகளும் சண்டையை நிறுத்தின. அமைதிக்கான தலைவன் நான்' என கூறியுள்ளார்.

தென் கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து -- கம்போடியா இடையே பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்னை உள்ளது. கடந்த, 24ல் இது மோதலாக வெடித்தது.

ஐந்து நாட்கள் நீடித்த சண்டையில், இரு தரப்பிலும் 35 பேர் பலியாகினர். 2.6 லட்சம் பேர் உயிருக்கு பயந்து இடம் பெயர்ந்தனர். இதைத் தொடர்ந்து, மலேஷியாவில் நடந்த பேச்சில், போரை நிறுத்த இரு நாடுகளும் முன்வந்தன.

இரு நாடுகளுக்கிடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டது குறித்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இரு நாட்டுத் தலைவர்களுடன் பேசினேன். என் தலையீட்டிற்கு பின், இரு நாடுகளும் சண்டையை நிறுத்தி, அமைதியை எட்டியுள்ளன என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி.

இந்த சண்டையை முடிவுக்குக் கொண்டுவந்ததன் மூலம், ஆயிர க்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியுள்ளேன். கடந்த, ஆறு மாதங்களில் பல போர்களை நிறுத்தி, அமைதிக்கான தலைவராக இருப்பதில் பெருமைப்படுகிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

முன்னதாக ஐரோப்பிய நாடான பிரிட்டனின் ஸ்காட்லாந்தில் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், 'நான் அதிபராக இல்லாமல் இருந்திருந்தால், உலகம் இந்நேரம் இந்தியா - பாகிஸ்தான் போர் உட்பட ஆறு மிகப் பெரிய போர்களை சந்தித்திருக்கும்' என கூறினார்.

Advertisement