காலிறுதியில் லக்சயா, தருண் * மக்காவ் ஓபன் பாட்மின்டனில்...

மக்காவ்: மக்காவ் நகரில் சர்வதேச பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் லக்சயா சென் ('நம்பர்-17'), இந்தோனேஷியாவின் ஷிகோ ஆரா ('நம்பர்-48') மோதினர். முதல் செட்டை 21-14 என வென்ற லக்சயா, அடுத்த செட்டை 14-21 என இழந்தார். அடுத்து நடந்த மூன்றாவது செட்டை 21-17 என வசப்படுத்தினார். முடிவில் லக்சயா 21-14, 14-21, 21-17 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில், தரவரிசையில் 47 வது இடத்திலுள்ள இந்தியாவின் தருண், 15வது இடத்திலுள்ள ஹாங்காங்கின் சியுக் லீயை சந்தித்தார். முதல் செட்டை 19-21 என இழந்த தருண், அடுத்து 21-14 என கைப்பற்றினார். 3வது செட்டில் 22-20 என சாதித்தார். முடிவில் தருண் 19-21, 21-14, 22-20 என போராடி வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறினார். இந்தியாவின் ஆதித்யா 18-21, 16-21 என மலேசியாவின் ஹோவிடம் தோற்றார்.
பெண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் ரக் ஷித்தா (தமிழகம்), 21-14, 10-21, 11-21 என தாய்லாந்தின் புசானனிடம் வீழ்ந்தார். ஆண்கள் இரட்டையர் இரண்டாவது சுற்றில் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, ஜப்பானின் குமகை, நிஷி ஜோடியை சந்தித்தது. இதில் இந்திய ஜோடி 10-21, 22-20, 21-16 என வெற்றி பெற்று, காலிறுதிக்குள் நுழைந்தது.

Advertisement