தொடர்ந்து முடங்கி வரும் பார்லிமென்ட்; எதிர்க்கட்சிகள் அமளியால் இரு அவைகளும் ஒத்திவைப்பு

12

புதுடில்லி: அமெரிக்கா வரி விதிப்பு, வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியால் பார்லிமென்டின் இரு அவைகளும் நாள் முழுதும் ஒத்திவைக்கப்பட்டது.

பார்லிமென்டின் மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 21ம் தேதி தொடங்கியது. வரும் ஆகஸ்ட் 21ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறுகிறது. கூட்டத்தொடரில் பல முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற, மத்தியில் ஆளும் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு திட்டமிட்டுள்ளது.

லோக்சபா, ராஜ்யசபாவில் அலுவல்கள் நடக்காமல் முடங்கி வருகிறது. எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் அமளியில் இறங்கி ரகளையில் ஈடுபட்டதால், கேள்வி நேரம் உள்ளிட்ட அலுவல்கள் முற்றிலுமாக வீணாகின. இந்நிலையில் இன்று (ஜூலை 31) லோக்சபா கூடியதும் அமெரிக்க வரி விதிப்பு, வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.



லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா பலமுறை எச்சரித்தும் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவையை மதியம் 12 மணி வரை சபாநாயகர் ஓம்பிர்லா ஒத்திவைத்தார். அதேபோல், எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக ராஜ்யசபாவும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

பிறகு இரண்டு அவைகள் கூடிய போதும் தொடர்ந்து அமளி ஏற்பட்டதால் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement