அமெரிக்காவை நம்பி இந்தியா இல்லை; வர்த்தக ஒப்பந்த விவகாரத்தில் சசி தரூர் கருத்து!

27


புதுடில்லி: வர்த்தகம் தொடர்பாக அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை எனில், அதில் இருந்து நாம் விலகலாம். இந்தியாவுக்கு வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன, என்று காங்கிரஸ் எம்.பி., சசிதரூர் கூறியுள்ளார்.


ரஷ்யா மற்றும் சீனாவுடன் வர்த்தகம் செய்து வரும் இந்தியா மீது 25 சதவீத வரி விதிப்பதாக அமெரிக்கா அதிபர் டிரம்ப் அறிவித்தார். இது இந்திய தொழில் நிறுவனங்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, இந்தியா மீதான அமெரிக்கா விதித்த வரி விதிப்பு குறித்து கவனத்தில் எடுத்துள்ளதாகவும், இந்த வரிவிதிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து ஆராய்ந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், இந்தியா மீது விதிக்கப்பட்ட வரி விதிப்பு குறித்து காங்கிரஸ் எம்.பி., சசிதரூர் கருத்து தெரிவித்துள்ளார்.

பார்லிமென்ட் வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது; இது மிகவும் சவால்மிக்க பேச்சுவார்த்தை. நாம் பல நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். பிரிட்டனுடன் ஒப்பந்த பேச்சுவார்த்தை முடிந்து விட்டது. அடுத்ததாக ஐரோப்பிய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறோம்.



அமெரிக்கா மட்டுமே நமது ஒரே வர்த்தக பங்குதாரர் அல்ல. அமெரிக்கா முற்றிலும் நியாயமற்ற கோரிக்கைகளை வைத்தால், நாம் மற்ற சந்தைகளுக்கு திரும்ப வேண்டியிருக்கும். இந்தியாவின் வலிமை என்னவென்றால், நாம் சீனாவைப் போல ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரம் அல்ல. நமக்கு வலுவான உள்நாட்டு சந்தை உள்ளது. நமது பேச்சுவார்த்தைக்குழுவிற்கு வலுவான ஆதரவு தேவை. நல்ல ஒப்பந்தத்திற்கு உடன்படவில்லை எனில், நாம் விலகுவது சிறந்தது, இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement