ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண் பலி

வாணியம்பாடி, வாணியம்பாடி அருகே, ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த இளம்பெண் பலியானார்.
கேரள மாநிலம், திருச்சூரை சேர்ந்தவர் ராஜேஷ், 32. இவரது மனைவி ரோகினி, 30. தம்பதிக்கு இரண்டரை வயதில் குழந்தை உள்ளது. சென்னையில் வசிக்கும் தந்தையை பார்க்க, மனைவி குழந்தைகளுடன், திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் ராஜேஷ் சென்னைக்கு புறப்பட்டார். நேற்று காலை, 8:00 மணியளவில், திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை ரயில்வே ஸ்டேஷன் அருகே ரயில் சென்றபோது, ராஜேஷ், ரோகினி இருவரும் குழந்தையை சீட்டில் உட்கார வைத்து விட்டு, ரயிலிலுள்ள கழிவறைக்கு சென்றனர். ராஜேஷ் திரும்பிய நிலையில், பின்னால் ரோகினி வருவார் என காத்திருந்தார்.
ஆனால், அவர் வராத நிலையில் கழிவறைக்கு சென்று பார்த்தபோது அவர் காணாமல் அதிர்ச்சி அடைந்தார். அதற்குள் ரயில் காட்பாடி ரயில்வே ஸ்டேஷன் சென்றது. அங்கு, ரயில்வே போலீசாரிடம் தகவல் தெரிவித்தார். அதன்படி போலீசார் ரயில் தண்டவாளம் வழியே, ஜோலார்பேட்டை வரை தேடி சென்றபோது, ஓடும் ரயிலில் இருந்து ரோகினி தவறி விழுந்து தண்டவாளத்தில் பலியாகி கிடப்பது தெரிந்தது. ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement