கட்டுக்கட்டாக வாக்காளர் அட்டைகள் குப்பை வண்டியில் இருந்ததால் 'ஷாக்'

கடலுார்:கடலுார் மஞ்சக்குப்பத்தில் குப்பை வண்டியில் கட்டுக்கட்டாக கிடந்த வாக்காளர் அடையாள அட்டையை கைப்பற்றி அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.
கடலுார், மஞ்சக்குப்பம் புல்லுக்கடை சந்தில் மாநகராட்சிக்கு சொந்தமான இடம் உள்ளது. அங்கு குப்பை வண்டிகள், பழுதடைந்த வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இங்கு, நேற்று காலை குப்பை வண்டியை எடுப்பதற்காக துப்புரவு தொழிலாளர்கள் வந்தனர்.
அப்போது, அந்த வண்டியில் கட்டுக்கட்டாக வாக்காளர் அடையாள அட்டைகள் கிடந்தன. மேலும், தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் மை, 'சீல்' போன்றவையும் இருந்தன.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள், கடலுார் தாசில்தாருக்கு தெரிவித்தனர். தாசில்தார் மகேஷ், குப்பை வண்டியில் இருந்த வாக்காளர் அடையாள அட்டைகள் உள்ளிட்டவற்றை கைப்பற்றினார்.
விசாரணையில், வாக்காளர் அடையாள அட்டை கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தது என, தெரிந்தது. அது எப்படி குப்பை வண்டிக்கு வந்தது என்பது குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.