'இ - நாம்' பரிவர்த்தனைக்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்கெட் கமிட்டிகளில் வியாபாரிகள் ஸ்டிரைக்

விழுப்புரம்:விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட மார்க்கெட் கமிட்டிகளில், இ-நாம் திட்ட புதிய பண பரிவர்த்தனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, வியாபாரிகள், கொள்முதல் செய்யாமல் ஸ்டிரைக்கில் ஈடுபட்டதால், 9,578 மூட்டை விளை பொருட்கள் தேக்கமடைந்தன.

தமிழக மார்க்கெட் கமிட்டிகளில், மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தில், கொள் முதல் பொருட்களுக்கான தொகையை, விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு, வியாபாரிகள் நேரடியாக அனுப்ப வேண்டும் என, வேளாண் துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள், மார்க்கெட் கமிட்டிகளில், விளைபொருட்களை கொள்முதல் செய்யாமல் காலவரையற்ற ஸ்டிரைக்கில் நேற்று ஈடுபட்டனர்.

இதனால், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட மார்க்கெட் கமிட்டிகளில், விவசாயிகள் கொண்டு வந்த விளைபொருட்கள் தேக்கமடைந்தன. காலையில் இருந்து காத்திருந்த விவசாயிகள், அந்தந்த மார்க்கெட் கமிட்டிகளில் கொள்முதல் செய்யப் படாததால் செய்வதறியாது தவித்தனர்.

விழுப்புரம் மார்க்கெட் கமிட்டியில், விளை பொருட்கள் கொள்முதல் செய்யாதை கண்டித்து, விவசாயிகள் காலை, 9:40 மணிக்கு தர்ணாவில் ஈடுபட்டனர்.

பின், விழுப்புரம் - புதுச்சேரி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சு நடத்தி, கலைத்தனர். அப்போது, வண்டிப்பாளையத்தை சேர்ந்த வசந்தா, 60, மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வியாபாரிகள் ஸ்டிரைக்கால், செஞ்சி, அரகண்டநல்லுார், உட்பட பல்வேறு மார்க்கெட் கமிட்டிகளில், 9,578 மூட்டைகள் தேக்க மடைந்தன.

Advertisement