இந்திய அணி திணறல் ஆட்டம் * மழையால் போட்டி பாதிப்பு

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது, கடைசி டெஸ்டில் இந்திய அணி திணறல் பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறது. மழை காரணமாக போட்டி பாதிக்கப்பட்டது.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டி கொண்ட 'ஆண்டர்சன் - சச்சின் டிராபி' டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. நான்கு போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து, 2--1 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் ஐந்தாவது, கடைசி டெஸ்ட் நேற்று லண்டன், கெனிங்டன் ஓவல் மைதானத்தில் துவங்கியது.
லேசான மழைத் துாறல் காரணமாக, 'டாஸ்' நிகழ்வு 3 நிமிடம் தாமதம் ஆனது. இதில் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் போப், பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் ஷர்துல் தாகூர், கம்போஜ் நீக்கப்பட்டனர். காயம் காரணமாக ரிஷாப் பன்ட், பணிச்சுமை காரணமாக பும்ரா விலகினர். இதனால் துருவ் ஜுரல், பிரசித் கிருஷ்ணா, கருண் நாயர், ஆகாஷ் தீப் சேர்க்கப்பட்டனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குல்தீப், அர்ஷ்தீப் இடம் பெறவில்லை.
ஜெய்ஸ்வால் ஏமாற்றம்
இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால், ராகுல் ஜோடி துவக்கம் தந்தது. வானம் மேகமூட்டமாக காணப்பட, பந்து நன்றாக 'சுவிங்' ஆகின. இதனால் ரன் சேர்க்க திணறிய ஜெய்ஸ்வால் (2), அட்கின்சன் பந்தில் அவுட்டானார். ராகுலுடன் இணைந்தார் சாய் சுதர்சன். வோக்ஸ் பந்தில் ஒரு பவுண்டரி அடித்தார். 16வது ஓவரை வீசிய வோக்ஸ், முதல் பந்தில் ராகுலை (14) போல்டாக்கினார். இந்திய அணி 38/2 ரன் என தடுமாறியது.
சுதர்சன், கேப்டன் சுப்மன் கில் இணைந்து போராடினர். டங்க் பந்தில் சுதர்சன், ஓவர்டன் பந்தில் சுப்மன் தலா ஒரு பவுண்டரி அடித்தனர். இந்திய அணி 52/2 ரன்களை எட்டியது. தொடர்ந்து வோக்ஸ் பந்துகளில் அவ்வப்போது பவுண்டரி அடித்தார் சுதர்சன்.
உணவு இடைவேளைக்கு 10 நிமிடம் முன்னதாக பலத்த மழை வர, போட்டி நிறுத்தப்பட்டது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 72/2 ரன் எடுத்திருந்தது.
கருண் அரைசதம்
பின் 2 மணி நேரம், 10 நிமிடத்துக்குப் பின் ஆட்டம் துவங்கியது. ஓவர்டன் பந்தில் சுப்மன் ஒரு பவுண்டரி அடித்தார். இவர் 21 ரன் எடுத்திருந்த போது, அட்கின்சன் பந்தை எதிர்கொண்டார். அருகில் பந்தை அடித்து விட்டு, ஒரு ரன்னுக்கு ஆசைப்பட்டு ஓடினார் சுப்மன். இதற்குள் பந்தை எடுத்த அட்கின்சன், 'ஸ்டம்சை' தகர்க்க, சுப்மன் வீணாக ரன் அவுட்டானார்.
பின் மறுபடியும் மழை குறுக்கிட, போட்டி நிறுத்தப்பட்டு, மீண்டும் துவங்கியது. இம்முறை சுதர்சன் (38), ஜடேஜா (9), ஜுரல் (19) அவுட்டாகினர். கருண் நாயர் இத்தொடரில் தனது முதல் அரைசதம் கடந்தார்.
முதல் நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 204/6 ரன் எடுத்திருந்தது. வாஷிங்டன் சுந்தர் (19), கருண் நாயர் (52) அவுட்டாகாமல் இருந்தனர்.

கவாஸ்கரை முந்தினார் சுப்மன்
நேற்று 21 ரன் எடுத்த சுப்மன் கில் ( மொத்தம் 743), 'சேனா' (SENA) நாடுகளில் (தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா) நடந்த டெஸ்ட் தொடரில் அதிக ரன் எடுத்த கேப்டன் என பெருமை பெற்றார். இதற்கு முன் 1966ல் வெஸ்ட் இண்டீசின் கேரி சோபர்ஸ் 722 ரன் (இங்கிலாந்து) எடுத்து இருந்தார்.
* 11 ரன் எடுத்த போது, ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன் எடுத்த இந்திய அணி கேப்டன் ஆனார் சுப்மன். முன்னதாக 47 ஆண்டுக்கு முன், 1978ல் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அப்போதைய கேப்டன் கவாஸ்கர், 732 ரன் (6 டெஸ்ட், எதிர்-வெ.இண்டீஸ்) எடுத்தார்.
கேப்டன் எதிரணி ஆண்டு ரன்
சுப்மன் கில் இங்கிலாந்து 2025 743
கவாஸ்கர் வெ.இண்டீஸ் 1978 732
கோலி இங்கிலாந்து 2016 655

15 முறை
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் தொடர்ந்து 5 முறை 'டாஸ்' வெல்லத் தவறினார் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில். தவிர, சர்வதேச அரங்கில் மூன்று வித கிரிக்கெட்டில், 2025, ஜனவரி 31 முதல் ஜூலை 31 வரை என, தொடர்ந்து 15வது முறையாக 'டாஸ்' தோற்றது இந்தியா.
இதற்கு முன் வெஸ்ட் இண்டீஸ் அணி தொடர்ந்து 12 முறை (1999, பிப்., 2-21) இதுபோல தோற்றது.

அபிமன்யு சோகம்
இந்திய அணி வீரர் அபிமன்யு ஈஸ்வரன் 29. முதல் தர போட்டிகளில் 167 இன்னிங்சில் 7404 ரன் எடுத்துள்ளார். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து தொடருக்கான அணியில் இடம் பெற்றார். இருப்பினும் தொடர்ந்து 10 போட்டியில் ஒன்றில் கூட களமிறங்க வாய்ப்பு தரப்படவில்லை.

3393 ரன்
டெஸ்ட் அரங்கில் ஒரு தொடரில் அதிக ரன்களை பதிவு செய்தது இந்தியா. இங்கிலாந்து தொடரில் (5 டெஸ்ட்) இதுவரை இந்தியா, 3393 ரன் குவித்துள்ளது. இதற்கு முன் 1978-79ல் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இந்திய அணி 3270 ரன் (6 டெஸ்ட்) எடுத்ததே அதிகமாக இருந்தது.
தவிர, 2016-17 (3230), 2024 (3140), 1963-64ல் (3119) என மூன்று முறை 3000 ரன்னுக்கும் (எதிர்-இங்கிலாந்து) மேல் இந்திய அணி எடுத்துள்ளது.

Advertisement