பூந்தமல்லியில் குடிநீர் லாரி மோதியதில் இருவர் பரிதாப பலி; ஒருவர் காயம்

பூந்தமல்லி பூந்தமல்லி அருகே, மெட்ரோ ஒப்பந்த குடிநீர் டேங்கர் லாரி, அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் மீது மோதியதில், இரண்டு பேர் பலியாகினர்; ஒருவர் காயமடைந்தார்.
சென்னை குடிநீர் வாரிய ஒப்பந்த டேங்கர் லாரி, ஆவடியில் இருந்து பூந்தமல்லி நோக்கி, நேற்று காலை சென்றது. லாரியை, அழகுராஜா, 31, என்பவர் ஓட்டினார்.
இந்த லாரி, பூந்தமல்லி அருகே சென்னீர்குப்பம் பகுதியை கடந்த போது, முன்னாள் சென்ற 'ஹீரோ ஸ்பிளண்டர்' வாகனம், 'சுசூகி அக்சஸ்' ஸ்கூட்டர், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த 'மகேந்திரா' கார் ஆகிய மூன்று வாகனங்களை அடுத்தடுத்து இடித்து, சாலையோர மின்கம்பத்தில் மோதி நின்றது.
லாரி மோதிய வேகத்தில் மின் ஒயர்கள் அறுந்து விழுந்தன. இந்த விபத்தில், ஸ்பிளண்டர் இருசக்கர வாகனத்தில் சென்றவர் சம்பவ இடத்திலேயே பலியானார்; ஒரு பெண் பலத்த காயமடைந்தார்.
அந்த பெண்ணை, அப்பகுதி மக்கள் மீட்டு, பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிறிது நேரத்திலேயே அவர், சிகிச்சை பலனின்றி பலியானார்.
விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் அழகுராஜை, அப்பகுதி மக்கள் பிடித்து சரமாரியாக தாக்கி கட்டி வைத்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், அழகுராஜை கைது செய்து, காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
விசாரணையில், விபத்தில் பலியானது, கட்டட நிறுவனத்தில் பணியாற்றும் சேலத்தைச் சேர்ந்த தனபால், 25, திருவேற்காடு தனியார் தொழிற்சாலையில் பணியாற்றிய தேவி, 40, என்பது தெரிந்தது.
பேருந்துக்காக காத்திருந்த தேவி, அந்த வழியாக வந்த கிருஷ்ணன், 52, என்பவரின் ஸ்கூட்டரில், 'லிப்ட்' கேட்டு சென்றபோது, விபத்தில் சிக்கி பலியானது விசாரணையில் தெரிந்தது. கிருஷ்ணன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்து, போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.