செம்பரம்பாக்கம் ஏரியில் ஆண் எலும்புக்கூடு கண்டெடுப்பு
பூந்தமல்லி, செம்பரம்பாக்கம் ஏரியில், நீர் வறண்ட பகுதியில், நேற்று ஆண் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது.
சென்னையின் குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் வறண்ட பகுதியில், ஆடு, மாடு மேய்க்க சென்றோர், அங்கு மனித எலும்புக்கூடு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
அதுகுறித்து, நசரத்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உள்ளாடை அணிந்த நிலையில் இறந்த ஆண் ஒருவரின் எலும்புக்கூடு என்பதை அறிந்தனர்.
முதல்கட்ட விசாரணையில், இறந்தவர், 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் என்பது தெரிய வந்தது. இவர், குளிக்கும் போது மூழ்கி இறந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டு உடல் இங்கு வீசப்பட்டதா என்ற கோணத்தில், போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும், இறந்தவர் குறித்த அடையாளங்களை கண்டறிய, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காணாமல் போனவர்கள் குறித்த விபரங்களை சேகரித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.