கொடுத்த பணத்தை திருப்பி கேட்டவருக்கு கொலை மிரட்டல்

திருவள்ளூர்:கொடுத்த பணத்தை திருப்பி கேட்டவரை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்த நால்வர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூர் அடுத்த வெள்ளேரிதாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கரன், 30. இவர் கடந்த 2024 ஜூன் மாதம் தாமரைப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மணி என்பவருக்கு 1.76 லட்சம் ரூபாய் கடனாக கொடுத்தார்.

பணத்தை திருப்பிக் கேட்டபோது, மணி தரமுடியாது என, கூறியதையடுத்து மணவாளநகர் காவல் நிலையத்தில் பாஸ்கரன் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை திருவள்ளூர் தேரடி பகுதியில் பாஸ்கரன் தன் மனைவியுடன் நின்று கொண்டிருந்தார்.

அப்போது மணி மற்றும் அவரது நண்பர்களான வினோத், நவீன் உள்ளிட்டோர் ஆபாசமாக பேசி சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். இதுகுறித்து பாஸ்கரன் கொடுத்த புகாரின்படி திருவள்ளூர் நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement