புதர் மண்டிய இரட்டை வாய்க்கால்: விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகரிப்பு

கரூர், இரட்டை வாய்க்காலில் செடி, கொடிகள் வளர்ந்து, விஷ ஐந்துக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கரூர் அருகே பள்ளபாளையம் பகுதியில், அமராவதி ஆற்றிலிருந்து, இரட்டை வாய்க்கால் பிரிகிறது. இது கரூர் நகரில், 12 கி.மீ., துாரம் சென்று பாலம்மாள்புரத்தில் ஆற்றில் கலக்கிறது. இரட்டை வாய்க்காலில் செடி, கொடிகள் படர்ந்து, பிளாஸ்டிக் குப்பை நிறைந்து, கழிவுநீர் வாய்க்காலாக மாறி விட்டது. நீண்ட நாட்களாக தூர் வாரப்படாததால், கரையோர குடியிருப்பு பகுதிகளில், விஷ ஜந்துக்ளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

இது குறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது:
இரட்டை வாய்க்காலில் ஓட்டல் மற்றும் இறைச்சிக்கடை கழிவுகள் பெருமளவில் கொட்டப்படுகின்றன. இதனால், நாய்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. நீலிமேடு, மக்கள் பாதை பகுதிகளில் கொட்டப்படும் கோழி கழிவுகளால், பாம்புகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால், வாய்க்கால் கரையோரம் உள்ள வீடுகளில் விஷ ஜந்துக்கள் நுழைகின்றன. மேலும், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், இரட்டை வாய்க்காலில் விடப்படுகிறது. நீண்ட காலமாக தேங்கிக் கிடக்கும் கழிவுகளால், கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால், கரையோரம் வசிப்பவர்கள் நன்றாக உறங்கி, பல நாட்களாகிவிட்டன. வாய்க்காலை குப்பை கொட்டும் இடமாக, மாநகராட்சி பணியாளர்கள் மாற்றி விட்டனர். இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement