ஆடி 18 பண்டிகையை முன்னிட்டு வாழைத்தார் விலை உயர்வு

ப.வேலுார்,
ஆடி 18 பண்டிகையை முன்னிட்டு, வாழைத்தார் விலை உயர்ந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பாண்டமங்கலம், பொத்தனுார், நன்செய் இடையாறு, குப்பிச்சி பாளையம், மோகனுார், ப.வேலுார், அண்ணா நகர், பிலிக்கல்பாளையம், ஆனங்கூர், ஜேடர்பாளையம்,கொத்தமங்கலம், சிறுநல்லி கோவில், அய்யம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், விவசாயிகள் வாழை பயிரிட்டுள்ளனர். பூவன், பச்சைநாடன், தேன் வாழை, ரஸ்தாளி, மொந்தன் ரகங்களை பயிரிட்டு, தற்போது வாழைத்தார்களை வெட்டி வருகின்றனர்.


இவை, உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், ப.வேலுாரில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டுகளுக்கும் கொண்டு வந்து விற்கப்படுகிறது. இங்கு ஏலம் எடுக்கப்படும் வாழைத்தார்கள், பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த வாரத்தை விட, இந்த வாரம் வாழைத்தார்களின் விலை அதிகரித்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில், ஆடி 18 பண்டிகையையொட்டி, நேற்று நடந்த ஏலத்திற்கு 1,200 வாழைத்தார்களை விவசாயிகள் கொண்டு வந்தனர். கடந்த வாரம், 300 ரூபாய்க்கு விற்பனையான பூவன் வாழைத்தார் தற்போது, 550 ரூபாய்க்கும், 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ரஸ்தாலி வாழைத்தார், 400 ரூபாயாகவும், 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தேன்வாழை வாழைத்தார், 350 ரூபாய், ஒரு மொந்தன் பழம், 5 ரூபாய்க்கு விற்றது, 8 ரூபாய்க்கு
விற்பனையானது.

Advertisement