சி.என்.ஜி., தொழில்நுட்பத்திற்கு 1,000 பஸ்களை மாற்ற நடவடிக்கை

2


சென்னை: அரசு போக்குவரத்து கழகங்களில் தேர்வு செய்யப்பட்ட 1,000 பஸ்களை, சி.என்.ஜி., தொழில் நுட்பத்துக்கு மாற்றிட, போதிய கருவிகள் வாங்க போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் டீசல் செலவை குறைக்கும் வகையில், டீசலுக்கு மாற்றாக, சி.என்.ஜி., எனப்படும், அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு வாயிலாக பஸ்களை இயக்க, தமிழக அரசு முடிவு செய்தது.

முதல் கட்டமாக கடந்த ஜனவரியில் மூன்று பஸ்கள் தேர்வு செய்யப்பட்டன. அவை, சி.என்.ஜி., தொழில்நுட்பத்துக்கு மாற்றப்பட்டு இயக்கப்படுகின்றன. இதனால், போக்குவரத்து கழகங்களின் செலவுகள் குறைந்துள்ளன. இதையடுத்து, சி.என்.ஜி., வகை பஸ்களின் எண்ணிக்கையை, அதிகரிக்க, போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுகுறித்து, தமிழக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:

அரசு போக்குவரத்து கழகங்களில், கடந்த மாதம் வரை, 40 பஸ்கள் சி.என்.ஜி.,யில் இயங்கும் பஸ்களாக மாற்றப்பட்டுள்ளன. சி.என்.ஜி., பஸ்களால் கி.மீ.,க்கு 3.94 ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, அரசு போக்குவரத்து கழகங்களில் தேர்வு செய்யப்படும் 1, 000 பஸ்கள், சி.என்.ஜி., தொழில்நுட்பத்துக்கு மாற்றப்பட உள்ளன.

இதற்கான கருவிகள் மற்றும் இதர உபகரணங்கள் வாங்க போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. படிப்படியாக இந்த பஸ்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement