பெண் துாய்மை பணியாளர் உயிரிழப்பு இழப்பீடு வழங்கக்கோரி போராட்டம்

தாம்பரம், கார் மோதி உயிரிழந்த துாய்மை பணியாளரின் குடும்பத்திற்கு, இழப்பீடு வழங்கக்கோரி சக ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.

மேடவாக்கம் அடுத்த சித்தாலப்பாக்கம், ஏரிக்கரை தெருவைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மனைவி ராணி, 28. இருவரும், தாம்பரம் மாநகராட்சியில், ஒப்பந்த துாய்மை பணியாளர்கள்.

கடந்த 28ம் தேதி நள்ளிரவு, தாம்பரம் - வேளச்சேரி சாலையில், சேலையூர் பகுதியில் துாய்மை பணியில் ராணி ஈடுபட்டிருந்தார். அப்போது, மேடவாக்கம் நோக்கி அதிவேகமாக சென்ற 'மாருதி ஆல்டோ' கார், ராணி மீது மோதியதில், பலத்த காயமடைந்தார். சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று உயிரிழந்தார்.

விசாரணையில், காரை ஓட்டியது மேடவாக்கத்தைச் சேர்ந்த லோகேஷ், 24, என்பது தெரியவந்தது. பள்ளிக்கரணை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

இந்த நிலையில், ராணியின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என, ஐந்தாவது மண்டல துாய்மை பணியாளர்கள், நேற்று காலை வேலையை புறக்கணித்து, மாநகராட்சி அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர்.

இதற்கு அதிகாரிகள் தரப்பில் ஒப்புதல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, துாய்மை பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

ரிப்பன் மாளிகை முற்றுகை

சென்னையின் பெரும்பாலான மண்டலங்களில் குப்பை கையாளும் பணி தனியார் மயமாக்கப்பட்டு உள்ளது. தற்போது, மாநகராட்சி துாய்மை பணி செய்துவரும் மண்டலங்களும், தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க, மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த முயற்சியை கைவிட வேண்டும்; தி.மு.க., அரசு அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி துாய்மை பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் எனக்கோரி, சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கத்தினர், பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையை நேற்று, 100க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Advertisement