ஐரோப்பாவில் வேலை ஆசைகாட்டி மோசடி; 193 பேரை ஏமாற்றியவர் சிக்கினார்

1


சென்னை: வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக, 193 வாலிபர்களை ஏமாற்றிவர் கைது செய்யப்பட்டார்.


செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்தவர் பத்மநாபன், 23. இவருக்கு, போலந்து நாட்டில் அதிக சம்பளத்தில் கறி வெட்டும் வேலை வாங்கி தருவதாக கூறி, சைபுதின், 51, என்பவர், 2023ம் ஆண்டு 1.25 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார். வேலை வாங்கி தராமலும், பணத்தை திருப்பி தராமலும் ஏமாற்றி வந்துள்ளார். இது குறித்து, சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரித்தனர்.

இதில், சைபுதின், 'சைப் இன்டர்நேஷனல்' என்ற பெயரில் அலுவலகம் நடத்தி வந்துள்ளார்.
ஐரோப்பாவின் போர்ச்சுக்கல், இத்தாலி, போலந்து, ஜெர்மன் உள்ளிட்ட நாடுகளில், அதிக சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி, 193 இளைஞர்களிடம் இரண்டு கோடி ரூபாய்க்கு மேல், மோசடியில் ஈடுபட்டுள்ளார்.



சைபுதினுக்கு, ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த மாகம் வினய் வர்தன், 36, என்பவர் உடந்தையாக செயல்பட்டுள்ளார். ஜன., 30ம் தேதி, சைபுதின் கைது செய்யப்பட்ட நிலையில், மாகம் வினய் வர்தன் வெளிநாட்டில் தஞ்சம் அடைந்தது, விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து, விமான நிலையத்திற்கு, 'லுக் அவுட்' நோட்டீஸ் வழங்கப்பட்டது.


நேற்று முன்தினம் போர்ச்சுக்கல் நாட்டில் இருந்து, சென்னை விமான நிலையம் வந்த மாகம் வினய் வர்தனை பிடித்த குடியுரிமை அதிகாரிகள், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். நேற்று அவரை கைது செய்த போலீசார், மடிக்கணினி, இரண்டு ஐ - போன், யூரோ கரன்சி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

Advertisement