செய்திகள் சில வரிகளில்

நடத்துநரிடம் நகை பறிப்பு

விழுப்புரத்தைச் சேர்ந்தவர் அருண், 40. அண்ணா நகர் மேற்கு, மாநகர பேருந்து பணிமனையில் தங்கி, நடத்துநராக பணிபுரிகிறார். இவர் பணிமுடிந்து, நேற்று அதிகாலை 4:00 மணிக்கு, பாடி மேம்பாலம் சர்வீஸ் சாலையில் நடந்து சென்றார். முகமூடி அணிந்துவந்த மூவர், கத்தியை காட்டி மிரட்டி, அருண் அணிந்திருந்த 2 சவரன் செயின் மற்றும் மொபைல் போனை பறித்து தப்பினர்.



சூதாடிய 7 பேர் கைது

தி.நகர், பகவந்தம் தெருவில் உள்ள தனியார் அடுக்கு மாடி குடியிருப்பில் பணம் வைத்து சூதாடியதுடன், போதை ஏற்படுத்தக் கூடிய 'ஹூக்கா' புகைத்த ஏழு பேரை, மாம்பலம் போலீசார் நேற்று பிடித்தனர்.

தேனாம்பேட்டையைச் சேர்ந்த 27 - 43 வயதுடைய ஏழு பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து, 1.04 லட்சம் ரூபாய், சீட்டு கட்டுகள், 'ஹூக்கா' உபகரணங்களை பறிமுதல் செய்தனர்.



ரவுடி கைது

புளியந்தோப்பு ஆடு தொட்டியில் வியாபாரிகளை மிரட்டி பணம் பறித்து வந்த, புளியந்தோப்பை சேர்ந்த முகமது உசேன், 37, என்பவரை, போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.



கஞ்சா விற்ற ரவுடி கைது

அரும்பாக்கம், திருவீதியம்மன் கோவில் தெருவில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட, ரவுடி கிரைம் விக்கி, 26, என்பவரை, அண்ணா நகர் மதுவிலக்கு போலீசார், நேற்று கைது செய்து, 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அதேபோல, பெரம்பூர் ரயில் நிலையம், சாலிகிராமம் உள்ளிட்ட இடங்களில் நடத்திய சோதனையில், யாசர் அராபத், 28, ரோகித் ஜோசப், 27, மற்றும் ஆசிக், 28 ஆகிய மூவரை கைது செய்து, 13 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.



விபத்தில் புரோஹிதர் பலி

வெட்டுவாங்கேணியைச் சேர்ந்தவர் வெங்கட்ராமன், 43; புரோகிதர். வெட்டுவாங்கேணி பேருந்து நிறுத்தம் அருகே, பைக்கில் நேற்று வேகமாக சென்றார். கட்டுப்பாட்டை இழந்த பைக், முன்னால் சென்ற பைக்கில் மோதியது. அதில் பயணித்த தம்பதி மற்றும் வெங்கட்ராமன் காயமடைந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வெங்கட்ராமன் உயிரிழந்தார்.



லாரிகளுக்கு அபராதம்

கிளாம்பாக்கம், குரோம்பேட்டை, வரதராஜபுரம் டோல்கேட் ஆகிய இடங்களில், தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர்கள், ஒரு வாரமாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதிக பாரம் ஏற்றிச்சென்ற, 26 வாகனங்களுக்கு, 16.30 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர். தவிர மண், கல், ஜல்லி போன்ற பொருட்களை தார்ப்பாய் போட்டு மூடாமல் எடுத்து சென்ற 30க்கும் மேற்பட்ட லாரிகளுக்கு 60,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.

Advertisement