கட்சியினர் மீது ராமதாஸ் நடவடிக்கை; அன்புமணி மீது அம்பு வீசாதது ஏன்?

சென்னை: அன்புமணி மீது மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தாலும், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், மகனை விட்டுக் கொடுக்காமல் இருப்பதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
கடந்த 2024 டிசம்பர் 28ல், புதுச்சேரியில் நடந்த பா.ம.க., பொதுக்குழுவில் வெளிப்படையாக வெடித்த, ராமதாஸ் -- அன்புமணி மோதல், ஏழு மாதங்களை கடந்தும் நீடித்து வருகிறது.
பா.ம.க., எனும் ஆளுயர கண்ணாடியை ஒரு நொடியில் உடைத்தவர்; கூசாமல் பொய் சொல்லக்கூடியவர்' என, அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.
அன்புமணிக்கு ஆதரவாக இருந்த பொதுச்செயலர் வடிவேல் ராவணன் உள்ளிட்ட நிர்வாகிகளை கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கிவிட்டு, புதியவர்களை ராமதாஸ் நியமித்துள்ளார்.
இப்படி 100க்கும் அதிகமானவர்களை பொறுப்புகளில் இருந்து நீக்கிய ராமதாஸ், மகன் அன்புமணி மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்காமல் இருப்பது, பா.ம.க.,வினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக, அக்கட்சி நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
பா.ம.க.,வில் இருக்கும் ஒவ்வொருவரும் அதிர்ச்சி அடையும் அளவுக்கு, மகன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை, ராமதாஸ் கூறினார். அன்புமணிக்கு துணைநிற்கும் நிர்வாகிகளை தொடர்ந்து நீக்கி வருகிறார்.
அன்புமணியின் நடைப்பயணத்திற்கு தடை விதிக்கக் கோரி உள்துறை செயலர், டி.ஜி.பி.,யிடம் புகார் தெரிவிக்கும் ராமதாஸ், அவர் மீது குறைந்தபட்ச ஒழுங்கு நடவடிக்கை கூட எடுக்கவில்லை.
மற்றவர்களை கட்சியிலிருந்து நீக்கியவர், பூம்புகார் மகளிர் மாநாட்டிற்கு அன்புமணிக்கு அழைப்பிதழ் அனுப்புகிறார். மொத்தத்தில், ராமதாசால் மகன் அன்புமணியை விட்டுக் கொடுக்க முடியவில்லை. இதை புரிந்து கொண்டுதான் அன்புமணியும் தன்னிச்சையாக செயல்படுகிறார். இருவரும் பாசப் பிணைப்பில் இருந்தால், கட்சியை ஏன் பலிகடா ஆக்க வேண்டும்? இவ்வாறு அவர் கூறினார்.
போட்டி பொதுக்குழு இதற்கிடையில், வரும் 9ல் பா.ம.க.,வின் பொதுக்குழுக் கூட்டத்தை மாமல்லபுரத்தில் கூட்டவிருப்பதாக அன்புமணி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதற்கு போட்டியாக, வரும் 17ல் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தைக் கூட்டுவதாக, பா.ம.க., நிறுவனர் ராமதாசும் அறிவித்துள்ளார். பொதுக்குழு கூட்டங்கள் வாயிலாக, கட்சியில் இருந்து ஒருவரை, மற்றொருவர் நீக்கி அறிவிப்பு வெளியிடுவர் என, கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
மேலும்
-
சர்ச்சை போஸ்டர்கள்; இரவோடு இரவாக அகற்றிய குஜராத் போலீஸ்!
-
உலகத்தில் தந்தையையே வேவு பார்த்த ஒரே மகன்: அன்புமணி மீது பழி சுமத்தினார் ராமதாஸ்!
-
காண்டாமிருகங்களை பாதுகாக்க கதிரியக்க ஊசி செலுத்தும் தென்னாப்ரிக்கா!
-
மாஜி அமைச்சரின் மகன், மகள் தண்டனை நிறுத்தம் ரத்து; சிறையில் அடைக்க உத்தரவு
-
ஐரோப்பாவில் வேலை ஆசைகாட்டி மோசடி; 193 பேரை ஏமாற்றியவர் சிக்கினார்
-
நடிகர் வையாபுரி -- விசிறி தாத்தா உட்பட 5 பேருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது