மேடையில் சண்டையிடும் திமுக எம்பி-எம்எல்ஏ; இவர்களா மக்களை காப்பாற்றுவர் என இபிஎஸ் கேள்வி

திருச்செந்தூர்: மீன்பிடி தடை காலத்தின் போது, மீனவர்களுக்கு நிவாரணம் வழங்குவதைப் போல, மழை காலத்தில் உப்பளம் தொழிலாளர்கள் நிவாரணம் வழங்கப்படும் என்று அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் வாக்குறுதி அளித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் நடந்த பிரசாரத்தில் அவர் பேசியதாவது; அதிமுக ஆட்சியமைந்த பிறகு உப்பள தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைக்கப்படும். மீன்பிடி தடை காலத்தின் போது, மீனவர்களுக்கு நிவாரணம் வழங்குவதைப் போல, மழை காலத்தில் உப்பளம் தொழிலாளர்கள் நிவாரணம் வழங்கப்படும்.
மீன்பிடி தடை காலத்தின் போது, மீனவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை உயர்த்தப்படும். ஏழை விவசாயிகளுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். தீபாவளி பண்டிகையின் போது தாய்மார்களுக்கு சேலை வழங்கப்படும்.
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருக்கிறது. திமுக எம்பியும், எம்எல்ஏவும் மேடையிலேயே சண்டை போட்டு கொள்கிறார்கள். அப்புறம் எப்படி இவங்க மக்களை காப்பாற்ற போகிறார்கள். பெண்களுக்கு இந்த ஆட்சியில் பாதுகாப்பில்லை. கஞ்சா விற்பனை அமோகமாக இருக்கிறது.
அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களின் பெயரை மாற்றி திமுக செயல்படுத்தி வருகிறது. தினம் தினம் ஒரு திட்டத்திற்கு பெயரை வைத்து விளம்பரம் செய்கிறார்கள். மக்களை ஏமாற்றுகிறார்கள். உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயரில் நடத்தப்படும் முகாம்களுக்கு அரசு பணத்தை ரூ.600 கோடியை செலவு செய்கிறார்கள். ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக, ஊர் ஊராக சென்று மக்களிடம் மனு வாங்குனீர்களே, அது என்னாச்சு?
இந்தியாவிலேயே அதிகம் கடன் வாங்கிய மாநிலம் தமிழகம். 4 ஆண்டுகளில் 4 லட்சத்து 38 ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ளார்கள். இந்தாண்டு ஒரு லட்சம் கோடி கடன் வாங்கப் போகிறார்கள். தமிழக மக்கள் ஒவ்வொருவர் மீது கடன் சுமையை சுமத்திய அரசாங்கம் தேவையா? இந்தக் கடனை வரி போட்டு தான் வசூல் செய்வார்கள், இவ்வாறு அவர் கூறினார்.




