பால் கொள்முதல் விலை உயருமா: அமைச்சர் பதில்

ஈரோடு:''பால் கொள்முதல் விலை உயர்வை பரிசீலனையில் வைத்துள்ளோம். முதல்வரிடம் கூறி செயல்படுத்துவோம்,'' என, பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.

பால் வளத்துறை சார்பில், கலெக்டர் கந்தசாமி தலைமையில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி முன்னிலை வகித்தார்.

கூட்டத்துக்கு பின், பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில், 472 கூட்டுறவு சங்கங்கள் செயல்படுகின்றன. அவற்றின் நீடித்த வளர்ச்சியை கருத்தில் கொண்டு, பால் மட்டும் வாங்கி செயல்படும் சங்கமாக இல்லாமல், பல்வகை பொருட்களை விற்கும் வகையில், 72 சங்கங்கள் மாற்றப்பட்டுள்ளன. இவற்றில், 98 லட்சம் ரூபாய்க்கு பால் உபபொருட்கள் விற்பனையாகி உள்ளன.

இச்சங்கங்கள் கால்நடை தீவனங்களை விற்பனை செய்தால், கிலோவுக்கு, 1 ரூபாய் என வழங்கப்படுகிறது.

இவ்வாறு கடந்தாண்டு இங்கு தயாரிக்கப்பட்ட, 5,550 டன் கால்நடை தீவனம் விற்ற அனைத்து சங்கத்துக்கும் நிதி வழங்கப்பட்டுள்ளது. தி.மு.க., ஆட்சி அமைந்ததும் பாலுக்கு, 3 ரூபாய் விலை உயர்வு, ஊக்கத்தொகை, 3 ரூபாய், தரமான பாலுக்கு, 1 ரூபாய் என, 7 ரூபாய் உயர்ந்துள்ளது.

பால் கொள்முதல் விலை உயர்வை பரிசீலனையில் வைத்துள்ளோம். முதல்வரிடம் கூறி செயல்படுத்துவோம்.

பால் கொள்முதலில் முன்னேற்றம் ஏற்பட்டு, பள்ளி விடுமுறை காலத்தில் தினமும், 36 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் நடந்துள்ளது. பால் மட்டுமின்றி, 200க்கும் மேற்பட்ட பால் பொருட்களாக மாற்றிய விற்பனையும் அதிகரித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement