திருச்சி டி.ஐ.ஜி.,யை அவதுாறாக பேச சீமானுக்கு உயர் நீதிமன்றம் தடை

சென்னை:திருச்சி சரக டி.ஐ.ஜி., வருண்குமாருக்கு எதிராக அவதுாறு கருத்துகளை தெரிவிக்க, சீமானுக்கு இடைக்கால தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஐ.பி.எஸ்., அதிகாரி வருண்குமார் இடையே, அண்மை காலமாக கருத்து மோதல் இருந்து வருகிறது.

' எனக்கு எதிராக பொது வெளியில் சீமான் ஆதாரம் இல்லாமல், அவதுாறு கருத்துகளை தெரிவிப்பதால், என் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. எனவே, எதிர்காலத்தில் ஆதாரமில்லாத கருத்துகளை தெரிவிக்க, சீமானுக்கு தடை விதிக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஐ.பி.எஸ்., அதிகாரி வருண்குமா ர் வழக்கு தொடர்ந்து ள்ளார்.

தனக்கு எதிராக ஆதாரமில்லாத அவதுாறு கருத்துகளை தெரிவித்து வரும் சீமான், 2.10 கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

இந்த வழக்கிற்கு எண்ணிட்டு, விசாரணைக்கு எடுக்க அனுமதிக்க கோரிய மனு, நீதிபதி கே.குமரேஷ் பாபு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சீமான் தரப்பில் வழக்கறிஞர் சங்கர் ஆஜராகி, ''வழக்கு எண்ணிடும் நிலையில் உள்ளதால், மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வழங்காமல், தற்போது எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது. ஏற்கனவே, மதுரை அமர்வில் அவதுாறு வழக்கு நிலுவையில் உள்ளது,'' என்று கூறினார்.

இதை ஏற்க மறுத்த நீதிபதி, திருச்சி சரக டி.ஐ.ஜி., வருண்குமாருக்கு எதிராக, சீமான் பேச இடைக்கால தடை விதித்தும், மனுவுக்கு பதில் அளிக்க உத்தரவிட்டும் விசாரணையை தள்ளிவைத்தார்.

Advertisement