போதை' மருமகன் அடித்துக்கொலை உடந்தையாக இருந்த 2 சிறுவர் கைது

ப.வேலுார், ராசிபுரம் அருகே, மலைவேப்பங்கொட்டை பகுதியை சேர்ந்தவர் கார்த்திக், 35; இவரது மனைவி நித்யா, 30; இவர்களுக்கு, 13, 10 வயதில் மகன், மகள் உள்ளனர். பரமத்தி அருகே, ஒழுகூர்பட்டியில் உள்ள தோட்டத்தில் குடும்பத்துடன் தங்கி, விவசாய வேலை பார்த்து வந்தனர்.

குடிப்பழக்கத்துக்கு அடிமையான கார்த்திக், தினமும் மது குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த, 28 இரவு, 11:00 மணிக்கு, போதையில் வந்த கார்த்திக், மனைவி நித்யாவிடம் சண்டையிட்டுள்ளார்.

இதுகுறித்து தன் தந்தை ராஜேந்திரனுக்கு, நித்யா தகவல் தெரிவித்துள்ளார். அங்கு சென்ற ராஜேந்திரன், இவரது மனைவி ராசாத்தி, இவர்களது மகன் மற்றும் இவரது நண்பர் ஆகியோர் சேர்ந்து கார்த்திக்கை சமாதானப்படுத்த முயற்சித்தனர். போதை தலைக்கேறிய நிலையில் இருந்த கார்த்திக், மாமனார் ராஜேந்திரனை தாக்கியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ராஜேந்திரன், ராசாத்தி, நித்யா, மைத்துனர் மற்றும் இவரது நண்பர் ஆகிய ஐந்து பேரும் சேர்ந்து கார்த்திக்கை கட்டையால் தாக்கினர். இதில் மயங்கிய கார்த்திக்கை, 16, 17 வயதுடைய இரண்டு சிறுவர்கள் உயிர்போகும் வரை அடித்து கொன்றுள்ளனர்.
இதுகுறித்து விசாரணை நடத்திய பரமத்தி போலீசார், மனைவி நித்யா, மாமனார் ராஜேந்திரன், மாமியார் ராசாத்தி, மைத்துனர், இவரது நண்பர் ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர்.
பின் அவர்கள் அளித்த தகவல்படி, 16, 17 வயதுடைய சிறுவர்கள் இருவரையும், நேற்று போலீசார் கைது செய்தனர்.

Advertisement