நடைப்பயிற்சி சென்ற தமிழக எம்பி சுதாவிடம் நகை பறிப்பு!

60


புதுடில்லி: டில்லியில் நடைபயிற்சி சென்ற மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் எம்.பி., சுதாவிடம் 4 சவரன் நகையை மர்மநபர்கள் பறித்து கொண்டு தப்பி ஓடினர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


டில்லியில் பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதற்கு அனைத்து மாநில எம்.பி.,க்களும் டில்லியில் தங்கி உள்ளனர். அவர்கள் மழைக்கால கூட்டத்தொடரில் பங்கேற்று தனது தொகுதிகளுக்கு தேவையான கோரிக்கைகள் குறித்து விவாதம் நேரத்தில் முன் வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 04) டில்லியில் நடைபயிற்சி மேற்கொண்ட போது, மயிலாடுதுறை தொகுதி காங் எம்பி சுதாவிடம் செயின் ஹெல்மெட் அணிந்தபடி வந்த அடையாளம் தெரியாத நபர்கள் 4 சவரன் நகையை பறித்து கொண்டு தப்பியோடினர்.



இது குறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் மர்மநபர்களை தேடி வருகின்றனர். டில்லியில் எம்.பி.,யிடம் நகை பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


அமித்ஷாவுக்கு கடிதம்



செயின் பறிப்பு தொடர்பாக, போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ள எம்பி சுதா, உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் மின்னஞ்சல் வாயிலாக கடிதம் அனுப்பி உள்ளார். அதில் அவர், ''செயின் பறிப்பில் ஈடுபட்ட நபரை விரைவாக கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும்.

ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் தங்கச் சங்கிலியை பறித்து சென்ற போது என்னுடைய கழுத்தில் காயம் ஏற்பட்டது. உயர் பாதுகாப்பு மண்டலத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் மர்மநபரை பிடிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்'' என குறிப்பிட்டுள்ளார்.



@block_P@

எம்பி சுதா பரபரப்பு பேட்டி

டில்லி தன்னிடம் செயின் பறித்தது தொடர்பாக, எம்.பி., சுதா நிருபர்களிடம் கூறியதாவது: நானும் சல்மா எம்.பி.,யும் நடைபயிற்சிக்கு சென்றபோது எனது செயின் பறிக்கப்பட்டது. உதவி கோரிய போது ஒருவர் கூட உதவ முன்வரவில்லை. ஹெல்மெட் அணிந்து எதிரே வந்த மர்மநபர் எனது தங்க செயினை பறித்து கொண்டு தப்பினர்.

எனது கழுத்தில் லேசான காயம் ஏற்பட்டது. நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. நாட்டில் எம்பிக்கே இந்த நிலை என்றால் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறிதான். டில்லியை பெண் முதல்வர் ஆளும் நிலையில் இங்கு பெண்களுக்கே பாதுகாப்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.block_P

Advertisement