கரப்பான்பூச்சியால் களேபரம்; நடுவானில் ஏர் இந்தியா விமானத்தில் பரபரப்பு

5


மும்பை: நடுவானில் பறந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தின் உள்ளே கரப்பான் பூச்சிகள் இருந்ததால் பயணிகள் அலறினர். இந்த சம்பவத்திற்கு விமான சேவை நிறுவனம் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

இது குறித்து ஏர் இந்தியா விமான சேவை நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது; சான் பிரன்சிஸ்கோவில் இருந்து கோல்கட்டா வழியாக ஏர் இந்திய விமானம் மும்பைக்கு வந்து கொண்டிருந்தது. அப்போது, விமானத்தில் சில கரப்பான் பூச்சிகள் இருந்ததால், 2 பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.

இதையடுத்து, எங்களின் விமான ஊழியர்கள் அவர்களை வேறு இடத்திற்கு மாற்றம் செய்து அமர வைத்தனர். அதன்பிறகு, கோல்கட்டாவில் எரிபொருள் நிரப்புவதற்காக, விமானம் நிறுத்தப்பட்டது. அப்போது, விமானத்தின் உள்ளே சுத்தம் செய்யப்பட்டு, பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டு விட்டது. அதன்பிறகு உரிய நேரத்தில் மும்பை விமான நிலையத்திற்கு விமானம் வந்து சேர்ந்தது.

விமானத்தில் வழக்கமான தூய்மைப்பணிகள் மேற்கொண்டு வந்தாலும், விமானம் தரையில் இருக்கும் போது சில நேரங்களில் பூச்சிகள் உள்ளே நுழைய வாய்ப்புள்ளது. பாதிக்கப்பட்ட பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். இனி இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காது எனக் கூறினார்.

Advertisement