சாத்தான்குளம் கொலை வழக்கு இன்ஸ்., அப்ரூவர் மனு தள்ளுபடி

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், அப்ரூவராக மாற விரும்பி இன்ஸ்பெக்டர் தாக்கல் செய்த மனுவை, மதுரை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் வியாபாரி ஜெயராஜ், மகன் பென்னிக்ஸை போலீசார், 2020 ஜூன், 19ல் விசாரணைக்கு அழைத்து சென்று தாக்கினர். இருவரும் கோவில்பட்டி கிளை சிறையில் இறந்தனர்.

சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.,க்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், உட்பட ஒன்பது போலீசார் மீது சி.பி.ஐ., கொலை வழக்கு பதிந்தது. மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடக்கிறது.

அங்கு, ஸ்ரீதர் தாக்கல் செய்த மனுவில், 'குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும். அரசு, காவல்துறைக்கு நேர்மை, உண்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக நான் அப்ரூவராக மாற விரும்புகிறேன்' என, குறிப்பிட்டார். நீதிபதி முத்துக்குமரன் விசாரித்தார்.

சி.பி.ஐ., தரப்பு, 'வழக்கில் முதலாவது எதிரி ஸ்ரீதர். அவருக்கு எதிராக போதிய ஆதாரங்கள் உள்ளன. தன் தரப்பு தவறை மறைக்க, மற்ற எதிரிகள் மீது ஸ்ரீதர் குற்றம் சாட்டுகிறார்' என, வாதாடியது.

ஜெயராஜ் மனைவி செல்வராணி தரப்பு, 'மற்ற போலீசார் தாக்கினர் என ஸ்ரீதர் கூறுவதிலிருந்து, அவர் சம்பவத்தின் போது ஸ்டேஷனில் இருந்தது உறுதியாகிறது. அப்படி இல்லாதவர், அப்ரூவராக மாற முடியாது. வழக்கிலிருந்து தப்பிக்கும் நோக்கில், ஸ்ரீதர் மனு செய்துள்ளார்.

மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்' என, விவாதித்தனர். நீதிபதி, 'மனுவில் தகுதி இல்லை. தள்ளுபடி செய்யப்படுகிறது' என, உத்தரவிட்டார்.

Advertisement