ஹிமாச்சலில் திடீர் வெள்ளம்; சிக்கி தவித்த 400க்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் மீட்பு

1


சிம்லா: ஹிமாச்சல் மாநிலத்தின் கின்னாரில் பெய்த கனமழையால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கைலாஷ் யாத்திரையில் நடுவழியில் சிக்கி தவித்த 400க்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் ஜிப்லைன் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அடுத்த 3 நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக, சிம்லா, சோலன், மண்டி, பிலாஸ்பூர், உனா, ஹமீர்பூர் மற்றும் காங்க்ரா போன்ற இடங்களில் கனமழை பெய்து வருகிறது.



இந்த சூழலில் கின்னெளர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கைலாஷ் யாத்திரைப் பாதையில், யாத்ரீகர்கள் சிக்கி தவித்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்தனர். அங்கு நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டனர்.


பின்னர் வெள்ளத்தில் சிக்கி தவித்த யாத்ரீகர்கள் 413 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். யாத்ரீகர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்ட மீட்பு படையினரை பல்வேறு தரப்பினர் பாராட்டி உள்ளனர். டாங்லிங் பகுதியில் இருந்த பாலங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

ரூ.1,852 கோடி இழப்பு



ஜூன் 20ம் தேதி பருவமழை தொடங்கியதிலிருந்து, ஹிமாச்சல பிரதேசத்தில் இதுவரை மொத்தம் ரூ.1,852 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை, 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 36 பேர் காணாமல் போயுள்ளனர். மழையால் 1,700க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.

Advertisement