வேளானுார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் இல்லை; அவதியில் நோயாளிகள்

உத்தரகோசமங்கை : உத்தரகோசமங்கை அருகே வேளானுார் ஊராட்சி அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையத்தில் டாக்டர் இல்லாததால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.

இங்கு கொம்பூதி, மேலமடை, வேளானுார், கருக்காத்தி, கன்னிகாபுரி, நத்தம், குளபதம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சைக்கு வருகின்றனர். இந்நிலையில் இங்கு டாக்டர் இல்லாத நிலையில் ஒரு செவிலியர் மட்டுமே 24 மணி நேரமும் தங்கி இருந்து பணி செய்கிறார்.

அவசர சிகிச்சைக்காக செல்லும் போது டாக்டர் இல்லை என்ற பதில் வருவதால் கிராம மக்கள் கடும் அதிருப்தி அடைகின்றனர்.

வைகை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முருகன் கூறியதாவது: வேளானுார் அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையத்திற்கு ஏராளமானோர் வருகின்ற நிலையில் காலை நேரத்தில் டாக்டர் ஒரு மணி நேரம் மட்டுமே வந்து விட்டு சென்று விடுகிறார். பெரும்பாலான நேரங்களில் டாக்டர் வருவதில்லை.

இந்நிலையில் 24 மணி நேரமும் செயல்படும் சுகாதார நிலையத்தில் ஒரு செவிலியர் மட்டுமே பணிபுரிவதால் பாதுகாப்பற்ற நிலை உள்ளது. எனவே கூடுதல் செவிலியரை நியமிக்கவும் உரிய நேரத்தில் டாக்டர் பணியாற்றவும் மருத்துவப் பணிகளின் துணை இயக்குனர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காய்ச்சல், தலைவலி, விஷக்கடி உள்ளிட்ட பிரச்னைகளுக்கும், சுகர், பிரஷர் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைக்கும் டாக்டர்களின் பரிந்துரை தேவையாக உள்ளது. எனவே இவ்விஷயத்தில் பல மாதங்களாக உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றார்.

Advertisement