அரசு திட்டத்தில் முதல்வர் பெயர் பயன்படுத்த தடையில்லை; சுப்ரீம் கோர்ட் உத்தரவு

84

புதுடில்லி: 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தில் முதல்வர் பெயர் பயன்படுத்துவதை எதிர்த்து அ.தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தொடர்ந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. வழக்கு தொடர்ந்த சி.வி.சண்முகத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.


அரசு திட்டங்களில் முதல்வரின் பெயரை பயன்படுத்த தடை விதிக்க கோரி, அ.தி.மு.க., எம்பி சிவி சண்முகம் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ''தமிழக அரசு துவங்க உள்ள புதிய திட்டங்கள் மற்றும் அமலில் உள்ள பழைய திட்டங்கள் தொடர்பான விளம்பரங்களில், முதல்வரின் புகைப்படம் இடம் பெற அனுமதி அளித்து, அவரது பெயரை பயன்படுத்த தடை விதித்துள்ளது.

அதேபோல், அரசு துவங்கும் திட்டங்களில், முன்னாள் முதல்வர் படத்தையோ, ஆளுங்கட்சியின் கொள்கை, சித்தாந்த தலைவர்களின் புகைப்படங்களையோ பயன்படுத்தக் கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து, சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு இன்று (ஆகஸ்ட் 06)
தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் கே.வினோத் சந்திரன், என்.வி.அன்ஜாரியா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி, பி.வில்சன், அபிஷேக் மனு சிங்வி வாதாடினர்.

திமுக வாதம்



''அரசியல் தலைவர்களின் பெயரில் நாடு முழுவதும் பல திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு அரசியல் ரீதியானது'' என திமுக தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது.

சரமாரி கேள்வி



பின்னர் சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் கூறியதாவது:

* உங்களுடன் ஸ்டாலின் திட்டம் பற்றி தேர்தல் கமிஷனில் புகார் தெரிவித்த மூன்றே நாளில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது ஏன்?

* தலைவர்கள் பெயரை வைக்கக் கூடாது என்றால் அனைத்து திட்டங்களுக்கும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.

* ஸ்டாலின் பெயரிலான திட்டத்தை மட்டும் சிவி சண்முகம் எதிர்ப்பதை ஏற்க முடியாது.

* ஒருவரை மட்டும் எதிர்ப்பது ஏன்?

* அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு நீதிமன்றத்தை பயன்படுத்தக்கூடாது. அரசியல் மோதலை தீர்க்க, நீதிமன்றத்தை பயன்படுத்தக்கூடாது.

இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

தள்ளுபடி



பின்னர், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தில் முதல்வர் பெயர் பயன்படுத்துவதை எதிர்த்து சி.வி.சண்முகம் தொடர்ந்த வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பெயரை பயன்படுத்த, அனுமதி அளித்த நீதிபதிகள், ரூ.10 லட்சம் அபராதம் செலுத்த சண்முகத்துக்கு உத்தரவிட்டனர்.


@block_P@

ஒரு வாரத்திற்குள்...!

ஒரு வாரத்திற்கு அபராத தொகை ரூ.10 லட்சத்தை கட்டாயம் செலுத்த வேண்டும் என நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.block_P

Advertisement