பட்டா வழங்க லஞ்சம் வாங்கிய 2 விஏஓக்கள் கைது: லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

7

திண்டுக்கல்: திண்டுக்கல் அய்யம்பாளையத்தில் கூலித்தொழிலாளியிடம் பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.2,500 லஞ்சம் வாங்கிய விஏஓவை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். அதேபோல், குன்றத்தூர் அருகே பட்டா வழங்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ ராபர்ட் ராஜை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகா அய்யம்பாளையம் கிராம நிர்வாக அலுவலராக (வி.ஏ.ஒ) ஆக ரமேஷ்(47) பணியாற்றி வருகிறார். அய்யம்பாளையத்தை சேர்ந்த விவசாய கூலித்தொழிலாளி கார்த்திகேயன்(37) என்பவர் தனது நிலத்தைசர்வே செய்து பெயர் மாற்றத்துடன் பட்டா கேட்டு விஏஓ.,விடம் விண்ணப்பித்தார்.


இதற்கு ரூ.3 ஆயிரம் லஞ்சம் வேண்டும் என ரமேஷ் கேட்டுள்ளார். பணம் கொடுக்காததால் 3 முறை கார்த்திகேயன் விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதன் பிறகு ரூ.2,500 லஞ்சம் தருவதாக கூறிய கார்த்திகேயன் இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் தெரிவித்தார்.


அவர்கள் கொடுத்து அனுப்பிய ரசாயனம் தடவிய ரூ.2,500 பணத்தை விஏஓ அலுவலகத்தில் வைத்து ரமேஷிடம் கார்த்திகேயன் கொடுத்தார். அங்கு மறைந்துஇருந்த லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி நாகராஜன் தலைமையிலான போலீசார் ரமேஷை கைது செய்தனர். லஞ்சப்பணத்தை பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை நடக்கிறது. விஏஓ அலுவலகத்தை மூடி விசாரணை நடக்கிறது.


ரூ.30 ஆயிரம் லஞ்சம்





காஞ்சிபுரம் மாவட்டம் தண்டலத்தில் ரவி ராஜ் என்பவர் பட்டா பெறுவதற்காக விஏஓ ராபர்ட் ராஜை அணுகினார். இதற்கு ரூ.80 ஆயிரம் லஞ்சம் வேண்டும் என விஏஓ கேட்டார். பிறகு பேரம் பேசி ரூ.30 ஆயிரம் வாங்கிய போது, ராபர்ட் ராஜை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.

Advertisement