சேதமடைந்த அரசு பேருந்து படிக்கெட் பயணியர் கால்களை பதம் பார்க்கும் அவலம்

காஞ்சிபுரம்:பயணியரின் உடைகள் மற்றும் கால்களை பதம் பார்க்கும் வகையில், சேதமடைந்த நிலையில் உள்ள அரசு பேருந்தின் பின்பக்க படியை சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

அரசு போக்குவரத்து கழகம், விழுப்புரம் கோட்டம், திருவண்ணாமலை மண்டலம், செய்யாறு பணிமனையைச் சேர்ந்த தடம் எண்130 என்ற அரசு பேருந்து, செய்யாறில் இருந்து, காஞ்சிபுரம் வழியாக கோயம்பேடிற்கு இயக்கப்பட்டு வருகிறது.

இப்பேருந்தின் பின்பக்க படியின் ஒரு பகுதி சேதமடைந்து, இரும்பு தகடுகள் கிழிந்த நிலையில் உள்ளது. இதனால், பேருந்தின் பின்பக்கமாக ஏறும்போதும், இறங்கும்போது பயணியரின் உடைகள் கிழிவதோடு, இரும்பு தகடு பயணியரின் கால்களையும் பதம் பார்க்கும் சூழல் உள்ளது.

எனவே, சேதமடைந்த அரசு பேருந்தின் பின்பக்க படியை சீரமைக்க அரசு போக்குவரத்து கழகம், விழுப்புரம் கோட்டம், திருவண்ணாமலை மண்டலம், செய்யாறு பணிமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement