சமூக நீதி பேசும் யாரும் கவின் கொலையை கண்டிக்கவில்லை-- டாக்டர் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு

ராஜபாளையம்:''சமூக நீதி, சுயமரியாதை பேசும் அ.தி.மு.க., தி.மு.க., ஹிந்து ஒற்றுமை பேசும் பா.ஜ., என யாருமே மென்பொறியாளர் கவின் படுகொலையை கண்டிக்காததால் அவர்களை ஒரே தட்டில் வைத்து பார்க்க வேண்டும்,'' என, ராஜபாளையத்தில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி குற்றம்சாட்டினார்.

அவர் கூறியதாவது: சமூக நீதி, சமத்துவம், சுதந்திரம், மதச்சார்பற்ற தன்மை என்பது வெறும் வார்த்தைகள் அல்ல. இது இந்திய அரசியல் சாசனத்தின் ஆன்மா. தற்போது அதற்கு நேர் விரோதமான சம்பவங்கள் தமிழகத்தில் நடந்து வருகின்றன. மென்பொறியாளர் கவின் தன்னை நேசிக்கும் பெண்ணுடன் பழகியதால் படுகொலை செய்யப்பட்டார். இன்றைய நவீன சூழலில் சமூகம் பார்த்து பழகுவது என்பது சாத்தியம் இல்லாதது.

தங்களது கொள்கைக்கு எதிராக நடக்கும் இதுபோன்ற படுகொலை சம்பவங்களை தடுத்து நிறுத்த தி.மு.க., அ.தி.மு.க., எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஹிந்து ஒற்றுமை பேசும் பா.ஜ., அதற்கு எதிராக உள்ள ஜாதி வேறுபாடுகளை களைய முன்வரவில்லை. இதில் எவரும் இந்த படுகொலையை கண்டிக்கவில்லை. அனைவருமே அடிப்படையில் ஜாதியவாதிகளாகவே உள்ளனர்.

கவின் படுகொலையை கண்டித்து தமிழகம் முழுவதும் ஒன்றியங்கள் தோறும் போராட்டம் நடத்த திட்டமிட்டு முதலாவதாக திருச்சியில் ஆக., 17-ல் நடத்த உள்ளோம்.

தி.மு.க., தந்த 525 வாக்குறுதிகளில் முக்கிய அம்சங்களை கூட நிறைவேற்றவில்லை. 2009-ல் பட்டியல் பிரிவை பிரித்து அருந்ததியர்களுக்கு 3 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கியது. அரசுத்துறை பணிகளை ஒன்றிய வாரியாக பிரித்து அனைத்து பணிகளையும் முன்னுரிமை அடிப்படையில் அருந்ததியர் சமூகத்திற்கு ஒதுக்கி உள்ளனர்.

துாய்மை பணியாளர்கள் 10 ஆண்டுகள் பணி செய்தால் பணி நிரந்தரம் என்ற வாக்குறுதியை தி.மு.க.,நிறைவேற்றவில்லை. பேரிடர் காலங்களில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களை ஏமாற்றக்கூடாது.

டாஸ்மாக்கை திறந்து வைத்து விட்டு உங்களுடன் ஸ்டாலின் என்பது ஏமாற்று வேலை என்றார்.

Advertisement