உட்கட்சி விவகாரத்தை வெளியில் பேச முடியாது: மைத்ரேயன் விவகாரத்தில் இபிஎஸ் கருத்து

6

திருப்பத்தூர்: ''மைத்ரேயனை கட்சியிலிருந்து நீக்கியது உட்கட்சி விவகாரம். என்ன நடக்கிறது என்று எங்களுக்குத் தான் தெரியும்'' என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்து உள்ளார்.


திருப்பத்தூரில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் நிருபர்கள் கேள்விக்கு பதில் அளித்தார். அதன் விபரம் பின்வருமாறு:



அமெரிக்காவின் வரி விதிப்பு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.


இதற்கு இபிஎஸ் அளித்த பதில்: இது எல்லாம் சர்வாதிகாரப்போக்கு. இன்றைக்கு எல்லா நாடுகளும் சரி சமமாக வரி விதித்து, அதற்கு ஏற்ப செயல்பட வேண்டும். ஒவ்வொரு நாட்டில் ஒரு பொருட்கள் விளைவிக்கின்றனர். வேண்டுமென்று அதிக வரி விதித்து ஒரு நாட்டை அடிமைப்படுத்துவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது.



நிருபர்: டிடிவி தினகரனும், நீங்களும் ஒரே மேடையில் இணைவார்கள் என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளாரே?

இபிஎஸ் பதில்: அது அவரிடம் கேளுங்கள். அவர் தானே சொல்லி இருக்கிறார். பாஜ கூட்டணி எங்கிட்ட உண்டு. மற்றது எல்லாம் நாங்கள் தான் முடிவு செய்வோம். அதிமுக தான் தலைமை தாங்குகிறது. சந்தர்ப்ப சூழ்நிலை வரும் போது அதற்கான பதில் தரப்படும்.



நிருபர்: திமுக ஆட்சியில் அதிக கொலைகள் நடக்கிறது என்று கேள்வி எழுப்பப்பட்டது.



இபிஎஸ் பதில்: திமுக ஆட்சி வந்த பிறகு சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு விட்டது என்று பொதுக்கூட்டத்திலும் பேசி வருகிறேன். பத்திரிகைகளில் தங்கம், வெள்ளி நிலவரம் தான் வந்தது. இன்றைக்கு, கொலை நிலவரங்களை பட்டியலிட்டு சொல்லும் மோசமான நிலை நிலவுகிறது.


குற்ற செயலில் ஈடுபடுவோர்களுக்கு போலீசாரை கண்டால் கொஞ்சம் கூட அச்சம் இல்லாத காரணத்தினால், இன்றைக்கு ரவுடிகளின் ராஜ்ஜியம், கொலை பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது. அதுமட்டுமின்றி இன்றைக்கு போதைப்பொருள் அதிகமாக விற்பனை செய்யும் காரணத்தினால், போதைக்கு அடிமையாகி அதனால் ஏற்படும் விபரீதமான செயல்கள் தான் இது.

நிருபர்:
ஒபிஎஸ் பாஜ கூட்டணியில் சேர்ந்து உங்களுடன் இணைந்து செயல்படுவாரா?




இபிஎஸ் பதில்: அதெல்லாம் அவரைக் கேளுங்க. எங்களை ஏன் கேட்குறீங்க.


நிருபர்: மைத்ரேயனை கட்சியிலிருந்து நீக்கியது ஏன்?


இபிஎஸ் பதில்: மைத்ரேயனை கட்சியிலிருந்து நீக்கியது உட்கட்சி விவகாரம். என்ன நடக்கிறது என்று எங்களுக்குத் தான் தெரியும். ஒவ்வொரு கட்சிக்கும் கட்டுப்பாடு உள்ளது. அதன் அடிப்படையில் தான் நடவடிக்கை எடுப்போம். அதனை வெளியே பேசுவது சரியாக இருக்காது.

Advertisement