கிட்னி திருட்டை பேசும் திமுக எம்எல்ஏ: வீடியோ வெளியிட்டு விளாசிய அண்ணாமலை

சென்னை: கிட்னி திருட்டு குறித்து பொதுமக்கள் மத்தியில் பேசும் திமுக எம்எல்ஏ கதிரவனின் வீடியோவை தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டு உள்ளார்.


@1brநாமக்கல் மாவட்டத்தில் வசிக்கும் ஏராளமான விசைத்தறி தொழிலாளர்களின் வறுமையை பயன்படுத்தி அவர்களின் சிறுநீரகங்களை விற்பனை செய்து பண மோசடி செய்ததாக திடுக்கிடும் புகார் எழுந்தது.


இந்த விவகாரத்தில் அங்குள்ள உள்ளூர் திமுகவினர் இடைத்தரகராக இருந்ததாகவும் கூறப்பட்டது. இதுதொடர்பாக நாமக்கல் கலெக்டர், சுகாதாரத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.


இந் நிலையில், கிட்னி திருட்டு குறித்து பொதுமக்கள் மத்தியில் பேசும் திமுக எம்எல்ஏ கதிரவனின் வீடியோவை தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டு உள்ளார்.


கிட்னி திருட்டை ஒப்புக் கொண்டு பேசும் அவர் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்க வில்லை என்றும் அவர் கூறி உள்ளார். அண்ணாமலை தமது எக்ஸ் வலைதள பதிவில் கூறி உள்ளதாவது;


மண்ணச்சநல்லூர் திமுக எம்எல்ஏ கதிரவன் வெட்கமின்றி பெருமையாக பேசுகிறார். தமது திருச்சி மருத்துவமனையில் சட்ட விரோதமாக செய்யப்பட்ட சிறுநீரக அறுவை சிகிச்சை மூலம் கிடைத்த லாபத்தை தந்தையின் ரோல்ஸ் ராய்ஸ் காரின் ரூ.14.5 கோடியுடன் ஒப்பிட்டு பேசி உள்ளார்.


இது நகைச்சுவை அல்ல. நாமக்கல்லை சேர்ந்த ஏழை நெசவாளர்கள் ஏமாற்றப்பட்டு, அவர்களின் சிறுநீரகங்கள் திருடப்பட்டு இருக்கின்றன. வீடியோவில், தமது மருத்துவமனை இந்த கிட்னி வர்த்தகத்தில் குறைந்தது ரூ.7.5 கோடி சம்பாதித்ததாகவும் ஒப்புக் கொள்கிறார்.


ஆனாலும் அவர் மீது திமுக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த கிட்னி திருட்டு விவகாரத்தில் இடைத்தரகரான திராவிட ஆனந்தன் கைது செய்யப்பட்டாரா?


இவ்வாறு அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.


இந்த பதிவுடன் திமுக எம்எல்ஏ கதிரவன் பேசும் 36 விநாடிகள் கொண்ட வீடியோவையும் அண்ணாமலை இணைத்துள்ளார்.

Advertisement