ஜார்க்கண்டில் நக்சல் ஒழிப்பு நடவடிக்கை தீவிரம்: துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் சுட்டுக்கொலை

ராஞ்சி; ஜார்க்கண்ட்டில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையின் போது நக்சலைட் இயக்கத்தைச் சேர்ந்தவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.



இதுபற்றிய விவரம் வருமாறு;


சாய்பாசாவில் உள்ள சவுதா மலைப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, உள்ளூர் போலீசாருடன் இணைந்து, பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.


இதையறிந்த நக்சலைட்டுகள் பாதுகாப்பு படையினருடன் கடும் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். இருதரப்பினர் இடையே பல மணி நேரம் நீடித்த சண்டையில் நக்சலைட் ஒருவனை சுட்டுக் கொன்றனர். அவனிடம் இருந்து துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.


கொல்லப்பட்ட நக்சலைட்டுடன் இருந்து தப்பியோடியவர்களை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் இறங்கி உள்ளனர். அவர்களுடன் உள்ளூர் போலீசார் கைகோர்த்துள்ளனர்.


இதுகுறித்து போலீஸ் ஐ.ஜி., மைக்கேல் ராஜ் கூறியதாவது: இந்த துப்பாக்கிச் சண்டையில் நக்சலைட்டுகளுக்கு பெரும் சேதாரம் ஏற்பட்டு உள்ளது. தப்பியோடியவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டு இருக்கிறது.


இவ்வாறு அவர் கூறினார்.


சாய்பாசாவின் சரண்டா பகுதியானது நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிகம் காணப்படும் பகுதியாகும். இங்குள்ள நகச்லைட்டுகளின் பல்வேறு முகாம்களை பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் அழித்துள்ளனர்.


இங்கு மட்டும் கிட்டத்தட்ட 90க்கும் அதிகமான நக்லைட்டுகள் பதுங்கி உள்ளதாக கூறும் பாதுகாப்பு படையினர், குறைந்த சக்தி கொண்ட வெடிபொருள்கள், துப்பாக்கிகளை பறிமுதல் செய்து உள்ளனர்.

Advertisement