தூய்மைப் பணியாளர்களை சந்திப்பதை தடுக்க முயன்ற போலீசார்: தமிழிசை கோபம்

4


சென்னை: '' தூய்மைப் பணியாளர்களை சந்திக்கக் கிளம்பிய தமிழக பாஜ மூத்த தலைவர் தமிழிசையை போலீசார் தடுத்தனர். ஆனால், என்னை வீட்டை விட்டு வெளியே செல்வதை யாராலும் தடுக்க முடியாது போலீசாரிடம் தெரிவித்தார். போராட்டக்காரர்களை சந்தித்து ஆதரவு கூறிவிட்டு சென்றார்.

போலீசார் குவிப்பு



பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் தூய்மைப்பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை பல்வேறு கட்சித் தலைவர்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக பாஜ மூத்த தலைவரும், முன்னாள் கவர்னருமான தமிழிசை தூய்மைப் பணியாளர்களை சந்தித்து ஆதரவு தெரிவிக்க கிளம்பி சென்றார். தகவல் அறிந்த போலீசார், அவரது வீட்டின் முன்பு குவிக்கப்பட்டனர். போராட்டக் களத்திற்கு செல்ல வேண்டாம் என கூறினர்.


அப்போது தமிழிசை போலீசாரிடம் கூறியதாவது: நான் எனது வீட்டை விட்டு கிளம்புவதில் என்ன பிரச்னை. நல்ல கதையாக இருக்கிறதே. நீங்கள் நல்ல அலுவலர்கள் தான். நானும் பொறுப்பான நபர் தான்.அதனால் எதையும் மீற மாட்டேன்.நான் எப்படி போகணும், எப்படி செயல்படனும், நடந்து கொள்ள வேண்டும் என தெரியும்.


நான் என் வீட்டை விட்டு போவேன். வீட்டை விட்டுபோகக்கூடாது என சொல்ல யாருக்கும் உரிமை கிடையாது. அது சரியில்லை.நான் கிளம்புவேன்.


நியாயமான கோரிக்கையாக இருந்தால் பரவாயில்லை. அநியாயமான கோரிக்கையை ஏற்க முடியாது. வீட்டை விட்டு கிளம்புவேன். எங்கு வேண்டுமானாலும் செல்ல உரிமை உள்ளது . தமிழகத்தில் மட்டும் மறுக்கப்பட்டால் என்ன செய்ய முடியும்.


பேச்சுவார்த்தை நடக்கட்டும். 5:30 மணிக்கு வருவேன் என சொன்னேன் . என் வீட்டை விட்டு கிளம்ப யார் அனுமதி கொடுக்க வேண்டும். நான் கேட்டு எல்லாம் சொல்ல முடியாது.
நான் கிளம்புகிறேன்.நீங்கள் கேட்டு நான் என் வீட்டில் இருந்து கிளம்புவேன் என்றால், சரியில்லை.என் வீட்டில் கிளம்புவதற்கு அனைத்து உரிமை உள்ளது. முழு சுதந்திரம் உள்ளது. கிளம்புவேன் அவ்வளவு தான். இவ்வாறு அவர் கூறினார்.

கண்டனம்



தமிழிசை வீட்டு முன்பு போலீசார் குவிக்கப்பட்டதற்கு தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.

தள்ளுமுள்ளு



இதனைத் தொடர்ந்து தூய்மைப் பணியாளர்களை சந்திக்க தமிழிசை சென்றார். அவருடன் பாஜவினரும் சென்றனர். அவர்களை தடுக்க போலீசார் பேரிகார்டுகளை வைத்து இருந்தனர். அதனை பாஜவினர் தள்ளிச்சென்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதன் பிறகு தூய்மைப்பணியாளர்களை சந்தித்து தமிழசை ஆதரவு வழங்கினார்.

வழக்குப்பதிவு



இதனிடையே, தடையை மீறி போராட்டக்காரர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்த தமிழிசை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisement