இந்தியாவுக்கு 200 மெகாவாட் கூடுதல் மின்சாரம்: நேபாளம் முடிவு

காத்மாண்டு: இந்தியாவிற்கு கூடுதலாக 200 மெகாவாட் மின்சாரத்தை வழங்க, நேபாள அரசு முடிவு செய்துள்ளது.

நேபாளம், ஹைட்ரோ பவர் (நீர்மின்சார) உற்பத்தியில் பெரும் திறன் கொண்டது, ஆனால் உள்நாட்டு தேவை குறைவு.
கோடை காலத்தில் மின் தட்டுப்பாடு சமாளிக்க இந்தியா, நேபாளத்திடம் மின்சாரம் கொள்முதல் செய்கிறது.

இதன் அடிப்படையில் இந்தியாவுக்கு மேலும் 200 மெகாவாட் மின்சாரத்தை ஏற்றுமதி செய்ய நேபாளம் தயாராகிறது.

இது தொடர்பாக நேபாள மின்சார ஆணைய செய்தித் தொடர்பாளர் ராஜன் தகால் கூறியதாவது:

நேபாளம் தற்போதுள்ள 940 மெகாவாட் மின்சாரத்துடன் கூடுதலாக 200 மெகாவாட் மின்சாரத்தை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்ய உள்ளது.
இதன் காரணமாக, 80 பில்லியன் நேபாள ரூபாய்களுக்கு சற்று அதிகமாகவே வருமானம் ஈட்ட முடியும்.

இது, அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவிற்கு 10,000 மெகாவாட் மின்சாரத்தை ஏற்றுமதி செய்வதற்காக நேபாளம் கையெழுத்திட்ட நீண்டகால ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும். இந்த மின்சாரம் ஜூன் முதல் நவம்பர் வரையிலான மழைக்காலத்தின் போது விநியோகம் செய்யப்படும்.

நேபாளத்திலிருந்து ஹரியானாவிற்கு கூடுதலாக 199.70 மெகாவாட் மின்சாரத்தை இறக்குமதி செய்ய இந்திய மத்திய மின்சார ஆணையம் நேற்று ஒப்புதல் அளித்தது.

இவ்வாறு ராஜன் தகால் கூறினார்.

Advertisement