ஆன்லைனில் ஒரு லிட்டர் பால் ஆர்டர் செய்ய முயற்சி; ரூ.18.5 லட்சத்தை இழந்த மூதாட்டி!

மும்பை: மும்பை அருகே, ஆன்லைனில் பால் ஆர்டர் செய்ய முயன்ற மூதாட்டியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.18.5 லட்சம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுபற்றிய விவரம் வருமாறு;
மும்பை வாடாலா பகுதியைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் (71) ஆன்லைன் டெலிவரி ஆப் ஒன்றில் பால் வேண்டும் என்று ஆர்டர் செய்ய முயன்றுள்ளார். சிறிது நேரத்தில் அந்த குறிப்பிட்ட பால் நிறுவனத்தில் இருந்து தீபக் என்பவர் மூதாட்டியின் செல்போனுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
பால் ஆர்டர் செய்ய உரிய விவரங்களை தரவேண்டும் என்று மறுமுனையில் பேசிய அந்த நபர் கூறி உள்ளார். இதற்கான லிங்க் ஒன்றையும் மொபைல்போனுக்கு தீபக் என்ற நபர் அனுப்பி இருக்கிறார்.
பின்னர் செல்போன் அழைப்பை துண்டிக்காமல், அந்த லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தி உள்ளார். மூதாட்டியும் அவரது பேச்சை நம்பி, அதில் கேட்கப்பட்ட விவரங்களை கொடுத்துள்ளார். அப்போதும் விடாமல், மீண்டும், மீண்டும் தொடர்பு கொண்டு கூடுதல் விவரங்களை மூதாட்டியிடம் கேட்டுள்ளார்.
இந் நிலையில், மூதாட்டி வைத்துள்ள 3 வங்கி கணக்குகளில் இருந்து மொத்தம் ரூ.18.5 லட்சம் மோசடியாக எடுக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதைக் கண்டு அதிர்ந்த பாதிக்கப்பட்ட மூதாட்டி, உடனடியாக காவல்துறையின் உதவியை நாடி இருக்கிறார்.
வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், மூதாட்டியின் செல்போனுக்கு வந்த அழைப்பு எங்கிருந்து வந்தது, லிங்க் அனுப்பியவர் யார் என்று விசாரணையை தொடங்கி இருக்கின்றனர். ஆன்லைன் மூலம் செயலிகளை பயன்படுத்தும் போது, மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.



மேலும்
-
பாப் சிம்ப்சன் காலமானார்: ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் சோகம்
-
உலக கோப்பை: அமெரிக்கா தகுதி
-
கரீபியன் கடலில் வலுப்பெறும் எரின் புயல்: துறைமுகங்கள் மூடல்
-
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் மிகச்சிறந்த மாற்றம்; தென்கொரியா
-
இந்தியா மீதான டிரம்பின் வரிகள் முட்டாள்தனம்: வெளுத்து வாங்கிய அமெரிக்க பொருளாதார நிபுணர் ஜெப்ரி சாக்ஸ்
-
சபலென்கா அதிர்ச்சி தோல்வி: சின்சினாட்டி ஓபன் காலிறுதியில்