விழுப்புரத்தில் 50 ஏக்கரில் தொழிற்பேட்டை ஏற்பாடுகளில் 'சிட்கோ' தீவிரம்

சென்னை: சிறு நிறுவனங்கள், தொழில் துவங்குவதற்காக, விழுப்புரம் மாவட்டம், நாயனுார், திருநெல்வேலி நரசிங்கநல்லுாரில், புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கும் பணியை, விரைவில் 'சிட்கோ' நிறுவனம் துவங்க உள்ளது. அங்குள்ள மனைகளை, வரும் ஜனவரியில், தொழில் முனைவோருக்கு ஒதுக்கீடு செய்ய, முடிவு செய்யப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், ஆலை அமைக்க ஏதுவாக, சாலை, குடிநீர் வினியோகம், மழை நீர் வடிகால் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய, தொழிற்பேட்டைகளை 'சிட்கோ' அமைக்கிறது.

மாநிலம் முழுதும், 135 தொழிற்பேட்டைகளை நிர்வகிக்கிறது. அவற்றில் தொழில் துவங்கியுள்ள நிறுவனங்கள், வாகனங்கள் மற்றும் தளவாடங்களுக்கான உதிரிபாகங்கள், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்கின்றன.

தற்போது, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நாயனுாரில், 50 ஏக்கரிலும்; திருநெல்வேலி மாவட்டம், நரசிங்கநல்லுாரில், 85 ஏக்கரிலும், தொழிற்பேட்டைகள் அமைக்க, 'சிட்கோ' நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்காக நிலம் எடுப்பு பணியை துவக்கி உள்ளது. இதைத் தொடர்ந்து, உள்கட்டமைப்பு பணியை இந்த ஆண்டு இறுதிக்குள் முடித்து, வரும் ஜனவரியில், தொழில் முனைவோருக்கு ஒதுக்கீடு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. இரு தொழிற்பேட்டைகளும், பொதுப் பிரிவில் இடம்பெறும், தொழில் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட உள்ளன.

Advertisement