ரேபிஸ் பாதிப்பை கோவா கட்டுப்படுத்தியது எப்படி?

பனாஜி: கடந்த 2021ம் ஆண்டு முதல் கோவா ரேபிஸ் கட்டுப்படுத்தப்பட்ட மாநிலம் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது. தொடர்ந்து 3 ஆண்டுகளாக ரேபிஸ் தொற்று காரணமாக ஒரு உயிரிழப்பு கூட நேரிடவில்லை என்பதும் ஆச்சர்யமான விஷயம்.
இந்தியா முழுவதும் தெருநாய்கள் பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாய்க்கடியால் ஏற்படும் ரேபிஸ் தொற்று காரணமாக உயிரிழப்பு சம்பவங்களும் தொடர்ந்து ஏற்படுகின்றன. இது பற்றிய வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், டில்லியில் உள்ள அனைத்து தெருநாய்களையும் பிடித்து காப்பகத்தில் அடைக்க உத்தரவிட்டுள்ளது.
இதற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும், நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அனைத்து தெருநாய்களையும் காப்பகத்தில் அடைப்பது சாத்தியம் இல்லை என்று ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.
இந்த சூழலில், கடந்த செப்டம்பர் 2017ம் ஆண்டு முதல் மனிதர்களுக்கு ரேபிஸ் தொற்று பாதிப்பு ஏற்படாமல் கோவா மாநிலம் ஒழித்துள்ளது. தொடர்ந்து 3 ஆண்டுகளாக ரேபிஸ் தொற்று காரணமாக ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. இதனால் கடந்த 2021ம் ஆண்டு கோவா ரேபிஸ் கட்டுப்படுத்தப்பட்ட மாநிலம் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது.
கடந்த 2023ம் ஆண்டு ஏற்பட்ட ஒரு உயிரிழப்பு காரணமாக இந்த சாதனை தகர்ந்து போனது. பின்னர் 2024ம் ஆண்டில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. இந்த ஆண்டும் இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.
எப்படி சாத்தியம்
கடந்த 2014ம் ஆண்டு கோவா மாநிலத்தில் தெருநாய்க்கடியால் ரேபிஸ் பாதிப்பு உச்சத்தில் இருந்தது. 17 பேர் பலியாகி விட்டனர். மக்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டபோது மாநில அரசு விழித்துக்கொண்டது. மிஷன் ரேபிஸ் என்ற தொண்டு நிறுவனம், தடுப்பூசி போடும் பணியை துவக்கியது.
30 நாட்களில் 50 ஆயிரம் நாய்களுக்கு தடுப்பூசி போடுவது இலக்காக கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 500க்கும் மேற்பட்ட கால்நடை டாக்டர்கள் மற்றும் உள்ளூர் குழுக்களுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டதில் 63,000 நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
அதற்கு அடுத்தாண்டு, முதல்வராக இருந்த மனோகர் பாரிக்கர், மிஷன் ரேபிஸ் உடன் இணைந்து நாய்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, 24 மணி நேர ஹாட்லைன், கண்காணிப்பு, தடுப்பூசி போடும் திட்டங்கள் அடுத்தடுத்து தொடங்கப்பட்டன. இதன் பயனாகவே 2017 ம் ஆண்டு முதல் கோவா மாநிலத்தில் தெருநாய்க்கடி, ரேபிஸ் பிரச்னை காணாமல் போனது என்கின்றனர் நிபுணர்கள்.
இன்று வரை கோவா மாநிலத்தில் தெருநாய்களுக்கு கருத்தடை செய்யும் பணி முழு வீச்சில் நடக்கிறது. ''ஒரு தெருநாய் தடுப்பூசி மற்றும் கருத்தடை செய்ய தவறினால் எட்டு அல்லது ஒன்பது நாய்க்குட்டிகள் இனப்பெருக்கம் செய்து ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்'' என மாநில கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் நீலகாந்த் ஹர்லங்கார் தெரிவித்தார்.
கடந்த 5 ஆண்டுகளில் கோவாவில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் கருத்தடை செய்யப்பட்ட தெருநாய்களின் எண்ணிக்கை:
2020-21ம் ஆண்டு - 2,265
2021-22ம் ஆண்டு- 2,117
2022-23-ம் ஆண்டு- 10,850
2023-24ம் ஆண்டு- 12730
2024-25ம் ஆண்டு-12,089






மேலும்
-
பாப் சிம்ப்சன் காலமானார்: ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் சோகம்
-
உலக கோப்பை: அமெரிக்கா தகுதி
-
கரீபியன் கடலில் வலுப்பெறும் எரின் புயல்: துறைமுகங்கள் மூடல்
-
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் மிகச்சிறந்த மாற்றம்; தென்கொரியா
-
இந்தியா மீதான டிரம்பின் வரிகள் முட்டாள்தனம்: வெளுத்து வாங்கிய அமெரிக்க பொருளாதார நிபுணர் ஜெப்ரி சாக்ஸ்
-
சபலென்கா அதிர்ச்சி தோல்வி: சின்சினாட்டி ஓபன் காலிறுதியில்